கரிசல் எழுத்தின் 'முன்னத்தி ஏர்' - ராயங்கால் ஸ்ரீ கிருஷ்ண ராமானுஜ பெருமாள் ராஜ நாராயணன் எனும் கிரா!
சென்னை: தமிழில் கரிசல் இலக்கியத்தின் தந்தையாக போற்றப்படுகிற கி.ரா. எனும் ராயங்கால் ஸ்ரீ கிருஷ்ண ராமானுஜ பெருமாள் ராஜ நாராயணன் (வயது 99) வயது மூப்பு காரணமாக புதுச்சேரியில் திங்கள்கிழமையன்று காலமானர். கி.ராவின் உடல் அவரது சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் இடைச்செவலில் நாளை பகல் 12 மணியளவில் தகனம் செய்யப்படும்.
கரிசல் இலக்கியத்தின் தந்தையாக, போற்றுதலுக்குரிய கதை சொல்லியாக திகழ்ந்தவர் கி.ரா. 1923-ம் ஆண்டு அன்றைய நெல்லை மாவட்டம் இடைச்செவல் கிராமத்தில் பிறந்தவர் கி.ரா.

விவசாயியாக வாழ்க்கையை தொடங்கிய கி.ரா, 30 வயதுகளின் நடுவில்தான் எழுத்தாளர் ஆனார். கரிசல் மண் மக்களின் வாழ்க்கையின் அத்தனை அம்சங்களையும் தமது எழுத்துகளில் வெளிப்படுத்தியவர் கி.ரா.
தமிழ் இலக்கியத்தில் எத்தனை வடிவங்கள் இருக்கின்றனவோ அத்தனையிலும் கரிசல் வாழ்க்கையை விவரித்தார். கடிதமாக, இலக்கியமாக, சிறுகதையாக, நாவலாக என பரந்துபட்ட தளத்தில் கரிசல் வாழ்க்கையை சொன்னவர் கி.ரா.
கரிசல் வட்டார மொழிக்கு என தனி அகராதியையும் உருவாக்கியவர் கிரா. இவரது கோபல்லபுரத்து மக்கள் நாவலுக்காக 1991-ல் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. இலக்கியத்துக்கான பல்வேறு விருதுகளைப் பெற்ற கி.ரா.வின் மனைவி கணவதி அம்மாள் 2 ஆண்டுகளுக்கு முன்னர் காலமானார்.
புதுச்சேரி பல்கலைக் கழகத்தின் சிறப்பு பேராசிரியராக பணியாற்றினார் கி.ரா. நூறு வயதை எட்ட இன்னும் சில மாதங்களே இருந்த நிலையில் வயது மூப்பின் காரணமாக புதுச்சேரியில் நேற்று காலமானார் கி.ரா.
இடைச்செவலில் நாளை தகனம்
அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக புதுச்சேரி லாசுபேட்டை அரசு குடியிருப்பில் உள்ள இல்லத்தில் இன்று பகல் 2 மணி வரை வைக்கப்பட்டிருக்கும். இதனைத் தொடர்ந்து கி.ரா.வின் உடல் புதுச்சேரியில் இருந்து அவரது சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் இடைச்செவலில் நாளை பகல் 12 மணியளவில் தகனம் செய்யப்படும்.












Click it and Unblock the Notifications