"குகையின் இறுதியில் காத்திருக்கும் ஒளி"..விடாமுயற்சியால் வென்ற அஸ்வின்..கற்றுத்தந்த 5 அசத்தல் பாடம்
சென்னை: உலகக் கோப்பை டி 20 தொடரில் ஆடும் இந்திய டி 20 அணியில் மீண்டும் வாய்ப்பு பெற்றதன் மூலம் தமிழ்நாடு வீரர் அஸ்வின் புதிய சாதனை படைத்து இருக்கிறார். 4 வருடங்களுக்கு பின் மீண்டும் இப்படி வாய்ப்பை பெற்று அஸ்வின் மலைக்க வைத்துள்ளார். அஸ்வினின் இந்த சாதனையில் கிரிக்கெட் பார்ப்பவர்களுக்கும், பார்க்காதவர்களுக்கும் முக்கியமான மெசேஜ் ஒன்று அடங்கி உள்ளது.
Recommended Video
2017 ஜூலையில் நடந்த டி 20 போட்டி. அஸ்வின் பார்ம் அவுட் ஆகி இருந்த காலம். ஜடேஜாவும் பார்மில் இல்லை. கேப்டன்சி தோனியிடம் இருந்து கோலிக்கு வந்து அணியில் நிறைய மாற்றங்கள் நடந்து கொண்டு இருந்தது. அந்த போட்டியில் இந்தியா மேற்கு இந்திய தீவுகளை எதிர்கொண்டது. அந்த டி 20 போட்டியில் ஆடும் போது அஸ்வினுக்கு தெரிந்து இருக்காது.. அதுதான் நீல உடையில் அவர் ஆடும் கடைசி டி 20 போட்டி என்று. ஆம் அதன்பின் 4 வருடமாக அவருக்கு இந்திய டி 20 அணியில் வாய்ப்பு கிடைக்கவே இல்லை.
இந்தியா ஆப் ஸ்பின் பவுலர்களை ஓரம்கட்டிவிட்டு லெக் ஸ்பின் பவுலர்கள் மீது கவனம் செலுத்தியது. முக்கியமாக தோனியின் வார்ப்புகளான ஜடேஜா, அஸ்வினை ஓரம்கட்டிவிட்டு கோலி "குல்சா" ஜோடி என்று புகழப்பட்ட குல்தீப் சாஹல் ஜோடியை களமிறக்கியது.

வாய்ப்பே இல்லை
இந்த குல்தீப் சாஹல் ஜோடியும் இந்திய அணியில் வந்த புதிதில் இருந்தே அடுத்தடுத்து அதிரடியை நிகழ்த்தியது. குல்தீப் வரிசையாக எடுத்த ஹாட் டிரிக், கொஞ்சம் கூட ரீட் செய்ய முடியாத அளவிற்கு அமைந்த சஹாலின் பவுலிங் என்று இரண்டு பேருமே களத்தில் வித்தை காட்டினார்கள். அதிலும் சாஹல் ஆர்சிபியில் இருந்ததால் அவருக்கு கேப்டன் கோலியிடம் இருந்து கூடுதல் வாய்ப்புகளும் கிட்டியது. இதனால் அஸ்வின் கிட்டத்தட்ட டெஸ்ட் பவுலர் என்ற நிலைக்கு சுருங்கி போனார்.

ஒருநாள் போட்டி
ஒருநாள் போட்டியிலும் அஸ்வின் மொத்தமாக ஓரம்கட்டப்பட்டுவிட்டார். ஜடேஜாவும் இப்படி ஓரம்கட்டப்பட்ட நிலையில், தனது பேட்டிங்கை மெருகேற்றிக்கொண்டு ஆல் ரவுண்டர் இடத்தை மீண்டும் கெட்டியாக பிடித்துக்கொண்டார். ஆனால் ஆப் ஸ்பின் பவுலரான அஸ்வினுக்கோ இந்திய லிமிடட் ஓவர் போட்டிகளில் இடமே கிடையாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. அஸ்வினும் எவ்வளவோ குட்டிக்கரணம் போட்டார்..லெக் ஸ்பின் கற்றுக்கொண்டார். பவுலிங் ஸ்டைலை மாற்றிப் பார்த்தார். பேட்டிங்கில் கொஞ்சம் மேலே இறங்கி ஆடிப்பார்த்தார். என்ன செய்தும் இவருக்கு டி 20 மற்றும் 50 ஓவர் அணிகளில் மட்டும் வாய்ப்பே கிடைக்கவில்லை.

கோலி ஈகோ
கோலியின் ஈகோ என்று இதை சிலர் விமர்சித்தாலும்.. டெஸ்ட் அணியில் மட்டும் கோலி அஸ்வினுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்தார். ஒரு வீரர் ஒரு ஸ்குவாட் என்ற விதியால் அஸ்வினுக்கு மட்டுமே வாய்ப்பே கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் நேற்று அறிவிக்கப்பட்ட உலகக் கோப்பை டி 20 போட்டியில் இந்திய அணியில் மீண்டும் அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தோனியை இந்திய அணியின் ஆலோசகராக நியமித்தது சர்ப்ரைஸ் செய்தி என்றால் அஸ்வினின் கம்பேக் என்பது ஸ்வீட் சர்ப்ரைஸ்.. அஸ்வினின் இந்த கம்பேக் அத்தனை சாதாரணமானது கிடையாது. பல நெருக்கடிகள், புறக்கணிப்புகள், காத்திருப்புகளை கடந்து அஸ்வின் இந்திய டி 20 அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார்.

அஸ்வின் ட்வீட்
நேற்று இந்திய அணியில் தேர்வான பின் அஸ்வின் தனது ட்வீட்டரில் முக்கியமான புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருந்தார். 2017ல் அஸ்வின் தனது வீட்டு சுவற்றில் எழுதிய வாசகம் அது.. எல்லா குகைக்கு இறுதியிலும் ஒளி இருக்கிறது. குகைக்கு இறுதியில் ஒளி இருக்கும் என்று நம்பிக்கையாக உழைப்பவர்களுக்கு மட்டுமே அந்த ஒளியை காணும் வாய்ப்பு கிடைக்கிறது என்று பொருள்படும் பிரபல வாசகம் அது. இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் புறக்கணிக்கப்பட்ட காலத்திலும் அஸ்வின் தனது சுவற்றில் இப்படி ஒரு நம்பிக்கையான வரிகளை எழுதி வைத்து இருக்கிறார்.

பாடம்
அஸ்வினின் இந்த சாதனையில் கிரிக்கெட் பார்ப்பவர்களுக்கும், பார்க்காதவர்களுக்கும் முக்கியமான சில மெசேஜ்களும் அடங்கி உள்ளன. முதல் விஷயம், எந்த காலகட்டத்திலும் பிறருக்காக நம்மை மாற்றவே கூடாது. அஸ்வின் தொடக்கத்தில் பிற பவுலர்களுக்காக தன்னுடைய ஆப் ஸ்பின்னை விட்டுவிட்டு லெக் ஸ்பின் முயன்றார். ஆனால் கடைசியில் அவருக்கு கை கொடுத்தது என்னவோ, அவருடைய பலமான ஆப் ஸ்பின்தான். இப்போது அவர் லெக் ஸ்பின் போடுவதே இல்லை. இரண்டாவது விஷயம், அஸ்வினின் விடா முயற்சி. இந்திய டி 20 அணியில் வாய்ப்பு கிடடிக்கவில்லை என்பதற்காக அஸ்வின் துவண்டு போகவில்லை. தொடர்ந்து தனக்கு வாய்ப்பு கிடைத்த டெஸ்ட் போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்தினார். தான் ஒரு ஜாம்பவான் என்பதை டெஸ்ட் போட்டியில் வெளிப்படுத்தினார்.

தவிர்க்க முடியாது
மூன்றாவது விஷயம், பிறருக்கு நம்முடைய முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவது. அஸ்வின் தன்னை கிரிக்கெட் உலகில் தவிர்க்க முடியாத நபர் என்று ஒரு வகையில் நிரூபித்துவிட்டார். டெஸ்ட் போட்டியில் நல்ல ஆட்டம், ஐபிஎல் தொடரில் தொடர்ந்து மூன்று சீசனாக சிறப்பான பவுலிங் என்று தன்னை முன்னில் நிறுத்தி தான் ஒரு தவிர்க்க முடியாத நபர் என்ற முக்கியத்துவத்தை அஸ்வின் வெளிப்படுத்திவிட்டார். இதனால்தான் ஸ்டம்பிற்கு வெளியே செல்லும் வகையில் பந்து போடும் ஆப் ஸ்பின் பவுலர் தேவை என்றதும் அஸ்வினை தேர்வு செய்தனர்.

தொடர் முயற்சி
நான்காவது விஷயம், அஸ்வின் எங்குமே தன்னை சமரசம் செய்து கொள்ளாமல் தனது ஆட்டத்தில் கவனம் செலுத்தினார். ஐபிஎல் போட்டிகள், டிஎன்பிஎல் போட்டிகள் என்று தனக்கு கிடைத்த இடத்தில் எல்லாம் திறமைகளை வெளிப்படுத்தினார். அதோடு தனது ஆப் ஸ்பின் பவுலிங்கிலேயே புதிய வேரியேஷன்களை கொண்டு வந்து புதுமைகளை புகுத்தி பேட்ஸ்மேன்களை குழம்பினார். சாஹல் போன்றவர்கள் செய்ய தவறியதை அஸ்வின் முறையாக செய்து அணிக்குள் மீண்டும் வந்து இருக்கிறார்.

கடைசி விஷயம்
ஐந்தாவது விஷயம் தலைமை பண்பு, அஸ்வின் தன்னை பவுலர் என்ற நிலையை தாண்டி ஒரு கேப்டன் என்ற நிலைக்கு கொண்டு சென்றுவிட்டார். ஆஸி தொடரில் கோலி இல்லாத நேரத்தில் ரஹானேவை வழி நடத்தியது, டெல்லி, பஞ்சாப் அணிகளில் புதுமைகளை புகுத்தியது என்று அஸ்வினின் தலைமைப்பண்பும் அனுபவமும் அவரை தவிர்க்க முடியாத நபராக மாற்றி உள்ளது. சர்பாட்டா பரம்பரை படத்தில்.. நீயே ஒளி பாடலில் ஆர்யா மீண்டும் பயிற்சி எடுத்து தன்னை யார் என்று நிரூபிப்பாரோ அப்படி ஒரு கம்பேக்கைதான் அஸ்வின் இப்போது கொடுத்துள்ளார். உலகக் கோப்பை டி 20 தொடரிலும் சிறப்பாக ஆடி வெற்றிவாகை சூடுவார் என்று நம்புவோம்!












Click it and Unblock the Notifications