கிராம நிர்வாக அலுவலர்கள் எழுப்பிய முக்கியமான பிரச்சனை.. அமுதா ஐஏஎஸ் அனுப்பிய கடிதம்
சென்னை: தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா, கிராம நிர்வாக அதிகாரி சங்கத்தின் மாநில பொது செயலாளர் அருள்ராஜுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தால் 2 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் என்று கூறியுள்ளார். அரசு ஊழியர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள் உரிய சட்டப் பாதுகாப்பை பெறுவதாகவும் அமுதா ஐஏஎஸ் கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் புதுக்கோட்டை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ். இவர், வல்லநாடு அருகேயுள்ள முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரியாக கடந்த 2023ம் ஆண்டு பணிபுரிந்துவந்தார். அப்போது, தாமிரபரணி ஆற்று மணலை அள்ளுவதற்கு எதிராகப் பல விஷயங்களை மேற்கொண்டு வந்தார். மணல் அள்ளுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் இவர் மீது மணல் கடத்தல்காரர்கள் சிலர் கடும் கோபத்தில் இருந்தார்கள் என்று கூறப்படுகிறது.. குறிப்பாக கலியாவூரைச் சேர்ந்த ராமசுப்பிரமணியனும், அவரது நண்பரான மாரிமுத்து என்பவரும் லூர்து பிரான்சிஸை தீர்த்துக்கட்ட முடிவு செய்திருந்தார்கள்.

இதையடுத்து கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி அன்று முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலகத்தில் வைத்தே லூர்து பிரான்சிஸை சரமாரியாக வெட்டியதில், அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். கொலையாளிகள் இருவரும் கைதுசெய்யப்பட்டனர். குற்றவாளிகள் இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. குற்றவாளிகள் இருவரும் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு சம்பவம் போல், தமிழகத்தில் மேலும் சில மாவட்டங்களிலும் கிராம நிர்வாக அலுவலர்கள் மீது தாக்குதல் நடந்தது. இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கமாநில பொதுச்செயலாளர் அருள்ராஜ், முதல்வர் தனிப்பிரிவில் அளித்த மனுவில், "கிராம நிர்வாக அலுவலர்கள் பாதுகாப்பற்ற சூழலில் பணியாற்றும் நிலையில், அவர்களுக்கு கைத்துப்பாக்கி வழங்க வேண்டும். மருத்துவர்கள், அரசுமருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்களுக்கான பணிப்பாதுகாப்புச் சட்டம் போன்று, கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் பணிப்பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.
இதனிடையே கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும், அவர்களுக்கு துப்பாக்கி வைத்து கொள்ள அனுமதி தர வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம் அரசு இது குறித்து உரிய முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில் தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா, கிராம நிர்வாக அதிகாரி சங்கத்தின் மாநில பொது செயலாளர் அருள்ராஜுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
இந்திய தண்டனைச் சட்டம் (1860), பிரிவு 353 என்பது பொதுத்துறை ஊழியரின் கடமைகளைத் தடுக்க அல்லது தாக்குதலுக்கு உள்ளாக்குபவர்களுக்கு தண்டனை வழங்குகிறது. அதாவது ஒரு பொதுத்துறை ஊழியரின் கடமைகளை செய்ய தடுக்க அல்லது கடமையில் இருந்து விலக்க முயற்சிப்பவர்கள், 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டையும் அனுபவிக்க நேரிடும். அதே போல் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் (வன்முறை மற்றும் சேதங்கள் தடுப்பு) சட்டம், 1992- மூலம் அரசு ஊழியர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள் உரிய சட்டப் பாதுகாப்பைப் பெறுகின்றனர்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications