சென்னையில் கூலி தொழிலாளியை கல்லால் அடித்து கொன்ற 2 பேருக்கு ஆயுள் தண்டனை.. கோர்ட் பரபரப்பு தீர்ப்பு!
சென்னை: முன்விரோதம் காரணமாக கல்லால் அடித்து வாலிபரை கொலை செய்த இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்ததுள்ளது.
சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கலைவாணனை பி.வி.காலனியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் முன்விரோதம் காரணமாக, தன் நண்பர் ராஜ் என்பவருடன் சேர்ந்து, கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பரில் கல் மற்றும் மூங்கில் கட்டையால் கொடூரமாக தாக்கி உள்ளார்.

இதில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கலைவாணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அவரது சகோதரி அளித்த புகாரில் எம்.கே.பி. நகர் காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் கிருஷ்ணமூர்த்தி, ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பான வழக்கு, சென்னை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள 16வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி கு.புவனேஸ்வரி முன் விசாரணை நடைபெற்றபோது, காவல்துறை தரப்பில், அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் டி.மகாராஜன் ஆஜரானார்.
இருதரப்பு வாதங்களுக்கு பின் நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில், இருவர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கூறி, இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications