கொரோனா 2 ம் அலையில் உயிரைப்பணையம் வைத்து பணி: இன்று வேலை நீக்கமா: மருத்துவர்கள், பணியாளர்கள் கேள்வி
கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், உயிரைப் பணயம் வைத்து பணி செய்த நிலையில் தற்போது அவர்களை பணி நீக்கம் செய்வது வருத்தமளிக்கிறது. அவர்களுக்கு மனித நேய அடிப்படையில் பணிப்பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருத்துவத்துறை பணியாளர்கள் கூட்டமைப்பு அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளது.
கொரோனா முதல் அலை ஓய்ந்த நிலையில் கடந்த பிப்ரவரி மார்ச் மாதங்களில் மீண்டும் தலைதூக்கிய இரண்டாம் அலை ஏப்ரல், மே மாதங்களில் உச்சத்தை அடைந்தது. இதனால் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன. மருத்துவர்கள், மருத்தவப்பணியாளர்கள் தேவை அதிகரித்தது. இதையடுத்து அரசு ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள், மருத்துவப்பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர்.

உயிரைப்பணயம் வைத்து உழைத்தவர்கள் பணி ஒப்பந்தம் முடித்து வைப்பு
உயிரைப்பணயம் வைத்து அவர்கள் உழைத்ததன் பலன் தொற்று எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டது. அதன் பின்னர் இயல்பு நிலைக்கு தமிழகம் திரும்பியது. இதையடுத்து ஒப்பந்த அடிப்படையில் எடுத்தவர்களை திரும்ப அனுப்பும் பணியை அரசு தொடங்கியுள்ளது. தற்போதும் மருத்துவர்கள், மருத்துவபணியாளர்கள் தேவை உள்ள நிலையில் வேலையை விட்டு நீக்குவது சரியா என்கிற கேள்வி பாதிக்கப்பட்டவர்களால் வைக்கப்படுகிறது. அவர்களுக்கு ஆதரவாக அமைப்புகளும் குரல் கொடுத்துள்ளன.

இம்மாதத்துடன் வேலை இல்லை-அரசு அறிவிப்பு
இந்நிலையில் இம்மாத இறுதியுடன் பணியிலிருந்து நின்று விடுமாறு, எழுத்துப் பூர்வமாகவும், வாய்மொழியாகவும் அவர்களுக்கு உத்தரவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால், அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இது மிகுந்த மன வேதனையை தருகிறது. கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு சேவை செய்தவர்களை பணி நீக்கம் செய்வது சரியல்ல.
தற்பொழுது கொரோனா பரவல் குறைந்துள்ள போதிலும், மூன்றாவது அலை வரும் நிலையும் உருவாகலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். அமெரிக்கா, ரஷ்யா, சிங்கப்பூர் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளிலும், கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. எனவே அவசரப்பட்டு தற்காலிக மருத்துவர்களையும்,செவிலியர்களையும்,மருத்துவப் பணியாளர்களையும் பணி நீக்கம் செய்வது நல்லதல்ல.

மருத்துவத்தேவை, மூன்றாம் அலை பாதிப்பு உள்ளது
கொரோனாவைத் தவிர, டெங்கு, நோரா வயிற்றுப் போக்கு போன்றவையும், மழைக்கால நோய்களும் அச்சுறுத்தும் நிலையிலும், முதுநிலை மருத்துவர்களுக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை காலதாமதமாகும் நிலையிலும் , மருத்துவ மனிதவள பற்றாக் குறையை சமாளிக்க, அவர்களது சேவையை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
எனவே, மனித நேய அடிப்படையிலும், பெருந்தொற்று காலத்தை ( Pandemic) கணக்கில் கொண்டும், தற்காலிக பணியாளர்கள் அனைவருக்கும், பணி நீட்டிப்பும், பணிப் பாதுகாப்பும் வழங்கிட வேண்டும். மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவத்துறை பணியாளர்களை, மத்திய அரசின் தேசிய சுகாதார இயக்கம் ( NHM ) மற்றும் மாவட்ட ஆட்சியர் மூலம் ( மாவட்ட நோயாளிகள் நலச் சங்கம்) மூலம் பணி நியமனம் செய்வதை கைவிட வேண்டும்.

மத்திய அரசின் NHM நிதியை பயன்படுத்தவேண்டும்
ஊழியர்களின் ஊதியத்திற்காக NHM மூலம் மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் நிதியை தமிழ்நாடு அரசு பெற்றுக் கொள்ள வேண்டும். அத்துடன் கூடுதல் நிதியை தமிழக அரசும் ஒதுக்கீடு செய்து, மருத்துவர்கள் செவிலியர்கள், சுகாதாரா ஆய்வாளர்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவத்துறை பணியாளர்களையும் , தமிழ்நாடு அரசே நேரடியாக, மருத்துவப் பணியாளர் நியமன வாரியம் ( MRB) மூலம், நிரந்தர அடிப்படையில் நியமிக்க முன்வர வேண்டும்.
மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்கள், ஆஷாக்கள், மருத்துவத்துறை பணியாளர்கள் பலருக்கு கடந்த சில மாதங்களாக வழங்கப்படாத ஊதியத்தை உடனடியாக வழங்கிட வேண்டும் எனவும், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் மருத்துத்துறை பணியாளர் கூட்டமைப்பு தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது". இவ்வாறு கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications