மகிழ்ச்சியான செய்தி.. இன்றும் மழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை மற்றும் வளிமண்டல கீழடுக்கில் நிலவும் சுழற்சியால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கொடைக்கானலில் நேற்று இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னை மற்றும் புறநகரில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையில் அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும். கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது, நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 6 சென்டிமீட்டர், அவலாஞ்சி 3 சென்டிமீட்டர், மேல் பவானி 3 சென்டிமீட்டர், கூடலூர் பஜார், நடுவட்டத்தில் 3 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
வட தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், தமிழகத்தில் ஜூன் ஒன்றாம் தேதி முதல் தற்போதைய காலகட்டத்தில் பெய்ய வேண்டிய மழை அளவை விட 24 சதவீதம் குறைவாக மழை பெய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.