ஆல் ஏரியாலயும் அடிச்சு பிளக்க தயாராகும் மழை.. சென்னை மக்களுக்கு ஜாலி.. வானிலை ரிப்போர்ட்!
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழையை காண முடிந்தது. மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக நேற்று அணையில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டது. கோடைக்காலத்தில் செம்பரம்பாக்கம் ஏரியின் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது இதுவே முதன்முறையாகும். கடந்த 24 மணி நேரத்தில் சென்னை தொண்டையார்பேட்டை, அம்பத்தூர் பகுதிகளில் 8 செ.மீ. அளவில் மழை பெய்துள்ளது.

இந்தநிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியி அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழையே பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதில் நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வரும் 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் என்ரு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெட்பநிலையாக 35 டிகிரி செல்கியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
வடக்கு கர்நாடகா மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், வடக்கு கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்றும், குமரிக்கடல் பகுதி, தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications