எங்க மொழிய கத்துக்க விடனும்.. தமிழக அரசுக்கு எதிராக ஆளுநர் ரவியிடம் புகாரளித்த மொழி சிறுபான்மையினர்
சென்னை: தமிழ்நாடு அரசின் கொள்கைகளால் தாங்கள் பாதிக்கப்படுவதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் தமிழ்நாட்டில் உள்ள மொழிச் சிறுபான்மையினர் புகார் அளித்து உள்ளனர்.
தமிழ்நாட்டில் தமிழ் மொழி பேசும் மக்கள் பெருமளவில் வசித்து வந்தாலும், அண்டை மாநில மொழிகளான மலையாளம், கன்னடம், தெலுங்கு பேசும் மக்களும், உருது, இந்தி பேசும் மக்களும் பல ஆண்டுகளாக இங்கு வசித்து வருகிறார்கள்.

இவர்கள் மொழி சிறுபான்மையினர் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களுக்கென்று மொழி சிறுபான்மையினர் அமைப்பு உள்ளது. இந்த அமைப்பை சேர்ந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் சந்தித்தனர்.
தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென் மாநில மொழிகள் உட்பட வேறு எந்த இந்திய மொழிகளையும் அனுமதிக்க வகை செய்யாத மாநில அரசின் கொள்கைகளால் தங்கள் குழந்தைகளுக்கு தாய்மொழியை கற்பிக்க இயலாத நிலையில் உள்ள தங்களின் சிரமங்களை ஆளுநரிடம் விளக்கியிருக்கிறார்கள்.

தங்களின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு பற்றியும் ஆளுநரிடம் விவரித்து இருக்கின்றனர். இத்தகைய கொள்கையால் 2.8 கோடிக்கும் அதிகமான மொழி சிறுபான்மையினர் தங்கள் தாய்மொழி மற்றும் கலாசாரத்தை மறந்து விடுவதாக அவர்கள் புகார் தெரிவித்தனர்.
"வளமான தமிழ் மொழியை மகிழ்ச்சியுடன் ஏற்கிறோம், ஆனால் நாங்கள் தாய்மொழியையும் கற்க அனுமதிக்கப்பட வேண்டும்." என அவர்கள் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் கோரிக்கை வைத்து இருக்கிறார்கள். அவர்களது கோரிக்கையை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக உறுதியளித்திருக்கிறார் ஆளுநர் ரவி.
தமிழ்நாடு அரசு தொடர்ந்து தமிழ் மொழியை வளர்க்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் தமிழ் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல நாட்களாக எழுப்பப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடம் என்ற சட்டம் அமலில் உள்ளது. கடந்த 2015 - 16 கல்வியாண்டில் இருந்து அனைத்து வகை பள்ளிகளிலும் 1 ஆம் வகுப்பு முதல் தமிழ் கட்டாய பாடமாக இருக்கிறது. இது படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டு 2022 - 2023 கல்வியாண்டில் 8 ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடமாக அமல்படுத்தப்பட்டு உள்ளது.

ஆனால், தமிழ் மொழியை தனியார் பள்ளிகள், சிபிஎஸ்சி பள்ளிகள் புறக்கணிப்பதாக பல்வேறு இயக்கங்கள், தமிழ் ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வந்தனர். இந்த நிலையில் கடந்த மே மாதம் தமிழ்நாட்டில் உள்ள சிபிஎஸ்இ உள்பட அனைத்து தனியார் பள்ளிகளிலும் தமிழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் துறை இயக்குனர் அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.
அந்த உத்தரவில் "மாநில பாடத்திட்ட பள்ளிகள் மட்டுமின்றி தமிழகத்தில் இயங்கும் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளிலும் 2024 - 25 கல்வியாண்டில் 10ம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடமாக கற்பிக்க வேண்டும். மாணவர்கள் பொதுத்தேர்விலும் தமிழை ஒரு தேர்வாக கட்டாயம் எழுத வேண்டும். இதற்கான தேர்வுமுறை மற்றும் பாடத்திட்டங்கள் விரைவில் உருவாக்கப்படும்.
அனைத்து தனியார் பள்ளிகளும் இதற்கு தயாராக வேண்டும். தமிழ் கற்றுக்கொடுக்க தகுதியான ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். தமிழ் கட்டாய பாடமுறை குறித்த அறிவிப்பை தனியார் பள்ளிகள் கடைப்பிடிப்பதை மாவட்ட கல்வி அதிகாரிகள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்". என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மொழி சிறுபான்மையினரை பாதுகாக்க ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications