மட்டனுக்கு பதில் பல்லி.. சென்னையில் பிரபல பிரியாணி கடையில் சாப்பிட்டவர் மருத்துவமனையில் அனுமதி!
சென்னை: புரசைவாக்கம் சரவணா ஸ்டோர்ஸ் அருகே உள்ள ஹோட்டலில் பல்லி விழுந்த பிரியாணியை சாப்பிட்டவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை புரசைவக்கம், சரவணா ஸ்டோர்ஸ் அருகே இருக்கிறது பிரபல பிரியாணி கடை. இந்த கடையில் நேற்று அப்பாஸ் என்ற இளைஞர் பிரியாணி சாப்பிட்டார்.
சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது அதில் பல்லி இருந்திருக்கிறது. இதையடுத்து உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அப்பாஸ் அனுமதிக்கப்பட்டார்.

அப்பாஸ்
மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அப்பாஸ் கூறுகையில், ''ஒரு வேளை விஷயமாக புரசைவாக்கம் சென்றேன். மதியம் ஒரு மணி போல, அப்போது சரவணா ஸ்டோர்ஸ் அருகிலிருக்கும் பிரபல ஹோட்டலுக்கு சாப்பிட சென்றேன். மட்டன் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டேன். பாதி சாப்பிட்டு, கடைசி கொஞ்சம் இருக்கும் போது, பிரியாணியில் பல்லி இருந்தது. பிரியாணியோடு கலந்திருந்ததால், தட்டில் தெரியவில்லை.

மட்டன் பிரியாணி
பிரியாணியைக் கையில் எடுத்தபோதுதான் பல்லி தெரிந்தது. மசாலாவோடு கலந்து, வெந்து போய் இருந்தது பல்லி. எனக்கு குமட்டிவிட்டது. இதையடுத்து, பில்லிங் செக்ஷனில் இதுகுறித்து தகவல் தெரிவித்தேன். அவர்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. உடனே, அங்கிருந்த சர்வரை அழைத்து, இதையெல்லாம் பார்க்கமாட்டாயா, தூக்கிப்போடமாட்டாயா என்று திட்டினார். இதைக்கேட்டதும் எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.

மருத்துவமனை
அருகில் மருத்துவமனை இருக்கிறது. வேண்டுமென்றால் நீங்கள் அங்கு சென்று பாருங்கள் என்று தெரிவித்தனர். அவர்கள் அழைத்துச் செல்லாமல் என்னை போய் பாருங்கள் என்று சாதாரணமாக தெரிவித்தனர். மனிதாபிமானம் இல்லாமல் நடந்துகொண்டனர். மன்னிப்பு கூட கேட்கவில்லை. வயிறு வலித்ததால் நானே வந்து மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தேன்.

ஆபத்து
மருத்துவமனையில் எனக்கு சிகிச்சை அளித்தார்கள், மருந்து மாத்திரை, ஊசி எல்லாம் கொடுத்தார்கள். இன்னும் வயிறு வலி நிற்கவில்லை. என் உயிருக்கு ஏதாவது ஆகிவிட்டால் அந்த ஹோட்டல் தான் பொறுப்பு. அந்த ஹோட்டல் மீது
தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்'' என அப்பாஸ் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த ஹோட்டலில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications