தமிழக அரசு பள்ளிகளில் இனி எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் கிடையாது.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
சென்னை: தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் கடந்த 2018ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டன.
சுமார் 2 ஆயிரத்து 381 பள்ளிகளில் தொடங்கப்பட்ட எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளுக்காக ஏராளமான தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பணிமாற்றம் செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டனர். இதற்கு பெற்றோர் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருந்தது.
எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு விடுமுறைதான்.. முதல்வர் திட்ட வட்டம்.. குழப்பம் வேண்டாம் மக்களே
பெற்றோர்கள் வரவேற்பு
முக்கியமாக 2019-20 கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இது சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் உள்ள பெற்றோர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இங்குப் பயிலும் குழந்தைகளுக்குச் சீருடை, காலணி உள்ளிட்டவை அரசு சார்பில் வழங்கப்பட்டது.
அங்கன்வாடி பள்ளிகளில் வகுப்புகள்
இதனிடையே கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் நடைபெறாமல் இருந்தன. இந்த நிலையில் அரசுப் பள்ளிகளில் அந்த இரு வகுப்புகளை மூட பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.இதற்கு பதிலாக சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அங்கன்வாடி பள்ளிகளில் மழலையர் வகுப்புகளை முறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் மாற்றம்
இதனால் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளுக்காக பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்கள், மீண்டும் அவர்கள் ஏற்கனவே பணியாற்றிய ஆரம்ப நடுநிலைப் பள்ளிகளுக்கு மாற்றம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மீண்டும் மழலையர் வகுப்புகள் தொடங்கப்படுவதால், அதற்கு தேவையான ஆசிரியர்களை சமூக நலத்துறை தரப்பில் பூர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மீண்டும் தனியார் பள்ளி நோக்கி பெற்றோர்?
இதனால் அரசுப் பள்ளிகளில் சேர்க்கலாம் என்று நினைத்திருந்த பெற்றோர் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கும் நிலை உருவாகியுள்ளது. கொரோனா பரவலுக்கு பின் தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளியை நோக்கி ஏராளமானோர் படையெடுத்த நிலையில், அரசின் இந்த செயல்பாடு மீண்டும் பெற்றோரை தனியார் பள்ளியை நோக்கி செல்ல தூண்டும் வகையில் இருப்பதாக விமர்சிக்கப்படுகிறது. இதனால் அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கலாம் என்று யோசித்திருந்த பல பெற்றோர் மத்தியில், அரசின் இந்த நடவடிக்கை ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.