கவலை இல்லை.. அதிமுக - பாஜக கூட்டணி உடைய நயினார் நாகேந்திரன் காரணமா? அண்ணாமலை பரபர விளக்கம்
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறியதற்கு என்ன காரணம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நயினார் நாகேந்திரன் பேசியதுதான் அதிமுக - பாஜக கூட்டணி முறிவிற்கு காரணமா என்று அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக பாஜக அறிவித்துள்ளது. அதிமுக பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நேற்று மாலை நடைபெற்ற நிலையில் பாஜக கேட்ட இடங்களை அதிமுக கொடுக்க முன்வரவில்லை.
இதையடுத்து இன்று கூட்டணி முறிந்துள்ளது. பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் அதிமுக எம்எல்ஏக்களை ஆண்மை இல்லாதவர் என்று கூறியது பெரிய சர்ச்சை ஆன நிலையில் தற்போது இந்த கூட்டணி முறிந்துள்ளது.

கூட்டணி முறிவு
இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறியதற்கு என்ன காரணம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில் உள்ளாட்சி தேர்தலில் அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இடம் ஒதுக்குவது கடினம். எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பாஜகவிற்கு தொடர்ந்து உந்து சக்தியாக இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி கொண்டு வரும் திட்டங்களுக்கு நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் அதிமுக தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தது. இபிஎஸ் மீண்டும் முதல்வராக வர கூட நாங்கள் சட்டமன்ற தேர்தலில் ஆதரவு அளித்தோம்.

அண்ணாமலை பேட்டி
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் மேல்மட்டத்தில் கூட்டணி இருந்தாலும் கீழ் மட்டத்தில் பணிகளை செய்வது கஷ்டமாக இருந்தது. இந்த நிலையில்தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி வைத்தது தொடர்பாக நேற்று ஆலோசனை செய்தோம். பாஜக வேகமாக வளர்ந்து வரும் கட்சி, உள்ளாட்சி தேர்தலை மையமாக வைத்து நாங்கள் பணியாற்றி வருகிறோம். எங்கள் தொண்டர்களுக்கு நாங்கள் செவி சாய்க்க வேண்டும். அடிப்படை அளவில் கட்சியை வளர்க்க வேண்டும்.

பாஜக கொள்கை
அதிமுக கூட்டணியில் இருந்தால் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில், குறிப்பிட்ட இடங்களில் நாங்கள் போட்டியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். பெரிய இடமாக இருக்கும் அதிமுகவிற்கு இடம் ஒதுக்குவதில் சில பிரச்சனைகள் இருந்தது. இதனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் என்று முடிவு செய்து இருக்கிறோம். அதே நேரத்தில் அதிமுகவில் நான் அதிகம் நேசிக்க கூடிய ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரிடம் தெளிவாக பேசி இருக்கிறோம்.

நிலைப்பாடு ஒன்றாக இருக்கும்
அகில இந்திய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணி தொடரும். முக்கியமான விஷயங்களில் நம்முடைய நிலைப்பாடு ஒன்றாக இருக்கும். மாறாக இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மட்டும் நாங்கள் தனித்து போட்டியிட இருக்கிறோம். பாஜக முன்னேற்றம் அடைய, வீடு வீடாக தாமரையை கொண்டு செல்ல, மக்களிடம் பாஜகவை கொண்டு செல்ல இது உதவியாக இருக்கிறோம். பிரதமர் மோடியின் கனவை நாம் நிறைவேற்ற முடியும்.

தாமரை மலர வேண்டும்
பாஜக தமிழ்நாட்டில் வர வேண்டும். எல்லோரின் வீட்டிலும் தாமரை மலர வேண்டும். தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணியில் விலகியது வருத்தமான விஷயமாக இல்லை. பாஜக தொண்டர்களுக்கு செவிசாய்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முழுமனதாக இந்த முடிவு எடுத்துள்ளோம். டெல்லி தலைமை ஏற்றுக்கொண்டுதான் இந்த முடிவு எடுத்து இருக்கிறோம். வரும் எதிர்கால தேர்தல்களில் அதிமுகவுடனான கூட்டணி தொடரும்.
Recommended Video

நயினார் நாகேந்திரன்
நாங்கள் நிறைய இடத்தில் நிற்க ஆசைப்பட்டோம். அது முடியவில்லை. நயினார் நாகேந்திரன் அன்று பேசியதற்கு வருத்தம் தெரிவித்தோம். அந்த வார்த்தை தவறாக வந்துவிட்டது என்று கூறினோம். நயினார் நாகேந்திரன் பேசியதற்கு வருத்தம் தெரிவித்து இருந்தார். பாஜகவினரும் விளக்கம் கொடுத்து இருந்தனர். அதை இரண்டு கட்சியினரும் பெரிதாக்கவில்லை. கூட்டணி முறிவுக்கு நயினார் நாகேந்திரன் பேச்சு காரணம் அல்ல. இது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்து எடுக்கப்பட்ட முடிவு என்று, பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications