"புதுச்சேரியில்கூட இன்னும் திறக்கலையே.. ஆனால் நாம்?" டாக்டர் ராமதாஸின் ஆதங்க ட்வீட்
மதுக்கடைகளை திறக்ககூடாது என டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்
சென்னை: "மதுவையே முதன்மை வருவாய் ஆதாரமாக கொண்டிருக்கும் புதுச்சேரியில் கூட மதுக்கடைகள் இன்னும் திறக்கப்படவில்லை. ஆனால், நாம்?" என்று டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
கொரோனாவைரஸ் தீவிரமாவதற்கு முன்பிருந்தே அது சம்பந்தமான அறிவுறுத்தல்களை வழங்கி டாக்டர் அன்புமணியும் தினந்தோறும் இதை பற்றி அலர்ட் செய்து கொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொரு நிகழ்வையும் விவரித்து, முன்னெச்சரிக்கையாக இருக்கும்பட அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.. அவ்வப்போது அரசுக்கும் யோசனைகளை தெரிவித்து வருகின்றனர்.
சமூக விலகல் கடைப்பிடிக்க வேண்டும், இன்னும் யாருக்கும் பயமே வரவில்லை, பொதுஇடங்களில் நடமாடுகிறார்கள் என்று சொல்லி கொண்டே இருந்தனர். மூடப்பட்ட மதுக்கடைகள் மூடப்பட்டதாகவே இருக்கட்டும், திறந்துவிட வேண்டாம் என்றும் கேட்டு கொண்டு வருகின்றனர்.
நேற்று அன்புமணி இதை பற்றி ஒரு காட்டமான அறிக்கையே வெளியிட்டிருந்தார்.. "ஏழை மக்களின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டுள்ளன... அவர்கள் யார் கைகளிலும் அடுத்த வேளை சாப்பாட்டுக்குகூட காசு இல்லை. இந்த சூழலில் மதுக்கடைகளை திறந்தால், மனைவியின் தாலியை பறித்து அடகு வைப்பது உட்பட குற்ற செயல்கள் ஏற்படும்.. மதுக் கடைகளை திறக்க ஏற்பாடுகளை செய்து வருவது அதிர்ச்சியளிக்கிறது.. தமிழக அரசின் இந்த முடிவு தவறான நேரத்தில் மேற்கொள்ளப்படும் மிகத் தவறான நடவடிக்கையாகும்" என்று நேரடியாகவே அட்டாக் செய்து கண்டனம் தெரிவித்திருந்தார்.
இப்போது டாக்டர் ராமதாசும் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்... "மதுவையே முதன்மை வருவாய் ஆதாரமாக கொண்டிருக்கும் புதுச்சேரியில் கூட மதுக்கடைகள் இன்னும் திறக்கப்படவில்லை. ஆனால், நாம்?" என்று கேள்வி எழுப்பி உள்ளார். இதற்கு வழக்கம்போல் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். "மதுவிலக்கை நடைமுறைபடுத்த சரியான நேரம் வந்திருக்கும் நிலையில் தவற விடுவது ஏன்?.. ஏழை குடும்பங்களில் அடுப்பு எரிய மதுவிலக்கை நடைமுறைப்படுத்துங்கள்" என்று கமெண்ட்களை பதிவிடுகின்றனர்.
Recommended Video
எனினும் ஒருசிலர், "பசப்புகளை பார்த்து பார்த்து அலுத்துபோச்சு.. கூட்டணியை விட்டு விலகிவிடுவோம், அதிமுக இனி எக்காலமும் ஆதரிக்கமாட்டோம் என உடைத்து பேச எது தடுக்கிறது? அறிக்கைவிட்டுவிட்டு மதுக்கடைகளை திறக்கும் அதிமுகவோடு பொருந்தா கூட்டணி எதுக்கு? என்றும், "எடப்பாடியாரை சந்தித்து உங்கள் கோரிக்கையை அறிவுறுத்தலாமே? ஏன் தயக்கம்? இதிலும் கூட்டணி தர்மமா?" என்றும் பதில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.