தீயாய் பரவும் கொரோனா.. இன்று காலை 10.30 மணிக்கு முதல்வர் எடப்பாடியை வீடியோவில் அழைக்கிறார் மோடி
சென்னை: கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.
வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நடைபெற உள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் அடுத்த கட்டமாக எந்த மாதிரி தளர்வுகள் அறிவிக்க வேண்டும் என்பது பற்றி விவாதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
கொரானா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்துகிறார்.

மாவட்டங்கள் நிலவரம்
அதன்படி 10:30 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் மோடி இருவரும் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆலோசிக்க உள்ளனர். தமிழகத்தில் சென்னையை பொறுத்த அளவில் கொரானா வைரஸ் பரவல் குறைவாக இருக்கும் நிலையில், பிற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது.

நிதி உதவி
கொரோனா பரவலை கிராமப்புறங்களில் தடுப்பதற்கு மருத்துவ கட்டமைப்பு வசதிகள், நிதி உதவிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை மோடியிடம் எடப்பாடி பழனிச்சாமி கேட்க கூடும் என்று தெரிகிறது. மேலும், தமிழகம் ஏற்கனவே கேட்டிருந்த நிதி ஒதுக்கப்படாதது பற்றியும் முதல்வர் இதில் கவனம் ஈர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இ பாஸ் நடைமுறை
தமிழகத்தில் இ பாஸ் நடைமுறை உள்ளது. இதேபோல ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பல்வேறு மாநிலங்களில் இதுபோன்ற கெடுபிடிகள் தற்போது கிடையாது. எனவே தமிழகத்திலும் கெடுபிடிகளை குறைத்து பொருளாதார ஊக்க நடவடிக்கைகளை எடுக்கும்படி நரேந்திர மோடி கேட்டுக் கொள்ளும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

பள்ளிகள் திறப்பு
இதனிடையே, பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுப்பதற்காக தமிழகம் குழு அமைக்கப்பட்டு இருந்தது. அந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் தான் இணையவழி வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் அரசாணையாக வெளியிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், இன்று, பள்ளிகள் திறப்பு பற்றி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.












Click it and Unblock the Notifications