லோக்சபா தேர்தல் கூட்டணி எப்போன்னு.... அப்ப தான் சொல்வோம்...!! சஸ்பென்ஸ் வைக்கும் ஜெயக்குமார்
சென்னை:லோக்சபா தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து உரிய நேரத்தில் ஈபிஎஸ், ஓபிஎஸ் அறிவிப்பார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:லோக்சபா தேர்தல் கூட்டணி யாருடன் வைப்பது என்பது உரிய நேரத்தில் அதிமுக தலைமை அறிவிக்கும்.
மத்திய அரசு தமிழகத்துக்கு நல்லது செய்தால் பாராட்டுவோம். அதே நேரத்தில் மக்களுக்கு எதிரான திட்டங்களை கொண்டு வந்தால் நிச்சயமாக அதனை எதிர்ப்போம்.
மேகதாதுவின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அரசே முடிவு செய்யும்.
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டுக்கு எத்தனை மதிப்பெண்கள் அளிப்பீர்கள் என்று கேட்கிறீர்கள். மார்க் போட நான் ஒன்றும் ஆசிரியர் பயிற்சி எடுத்து வரவில்லை என்று ஜெயக்குமார் கூறினார்.
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் வெளியான அன்று இது குறித்து கருத்து தெரிவித்திருந்த அமைச்சர் ஜெயக்குமார், மீன்வளத் துறைக்கு மத்திய அரசில் தனி அமைச்சகம் வேண்டும் என்பது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் எண்ணம்.
அதன் அடிப்படையில் தான் கோரிக்கை வைக்கப்பட்டு, தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தோம். எங்கள் நிர்பந்தத்தை ஏற்று, மத்திய அரசு இதை நிறைவேற்றியுள்ளது. இது மீனவர்களுக்கு இனிப்பான செய்தியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.