ஏ...கோவிந்தசாமி கதவை திற ரேஞ்சுக்கு அதிமுகவுடன் போராடும் டெல்லி பாஜக.. இறங்கி வர மறுக்கும் எடப்பாடி!
சென்னை: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்த அதிமுகவை சமாதானப்படுத்த டெல்லி பாஜக மேலிடம் மும்முரமாக முயற்சித்துக் கொண்டிருக்கிறதாம். ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பு இறங்கி வர முடியாது என அடம்பிடித்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையுடனான மோதலைத் தொடர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக அறிவித்தது. அத்துடன் லோக்சபா தேர்தலில் அதிமுக தலைமையில் தனி கூட்டணி அமைக்கப்படும் எனவும் அதிமுக அறிவிப்பு வெளியிட்டது.

கனத்த மவுனம் காக்கும் பாஜக: அதிமுகவின் இந்த முடிவு தொடர்பாக டெல்லி பாஜக மேலிடம் இன்னமும் அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவிக்கவில்லை. தமிழ்நாடு பாஜக தலைவர்களில் பெரும்பாலானோர் முன்பைவிட கனத்த அமைதி காத்து வருகின்றனர்.
அரசியல் நாடகமா?: அதேநேரத்தில் இது ஒரு அரசியல் நாடகம்.. விரைவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக மீண்டும் இணையும் என்றே பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள், அரசியல் விமர்சகர்களும் கூறி வருகின்றனர். இதனை உறுதிப்படுத்தும் வகையில் டெல்லி பாஜக மேலிடம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
2 'ஏக்நாத் ஷிண்டேக்களை' சந்திக்க மறுப்பு: இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பேசுவதற்கு அதிமுகவின் 2 முக்கிய தலைவர்களைத்தான் தூதர்களாக அனுப்பி பார்த்ததாம் பாஜக. ஆனால் 'ஏக்நாத் ஷிண்டேக்கள்' என்ற சந்தேக முத்திரையுடன் ஒதுக்கி வைக்க நினைக்கும் அந்த 2 மூத்த தலைவர்களை சந்தித்து கூட்டணி விவகாரம் குறித்து பேச விரும்பவில்லை என தெரிக்கப்பட்டுவிட்டதாம் எடப்பாடி தரப்பில்.
அண்ணாமலை மாற்றம்- ஒரே நிபந்தனை: அத்துடன் அண்ணாமலையை தமிழ்நாடு பாஜகவில் இருந்து மாற்றினால்தான் அடுத்த கட்டமாக பேசலாம் என்கிற ஒரு தகவலையும் டெல்லிக்கு பாஸ் செய்திருக்கிறதாம் எடப்பாடி தரப்பு. இதனை கவனமாக பரிசீலனை செய்கிறோம் என்று மட்டும் டெல்லியில் இருந்து உறுதி வழங்கப்பட்டதாம்.
எடப்பாடி தரப்பு அதிருப்தி: அதேநேரத்தில் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் தரப்புடனும் டெல்லி பாஜக பேச்சுவார்த்தைகளை தொடங்க போவதாக கூறப்படுகிறது. இதற்கான மூவ்களையும் டெல்லி பாஜக மேற்கொள்ள தொடங்கிவிட்டதாம். இதனை எடப்பாடி தரப்பு இம்மியளவும் ரசிக்கவில்லையாம். ஓபிஎஸ், டிடிவி தினகரனை இணைத்துக் கொள்ள பேச்சும் நடத்திக் கொண்டு எங்களுடன் சமாதான பேச்சு நடத்துவதாக சொன்னால் எப்படி ஏற்பது? என்பதுதான் எடப்பாடி தரப்பு கேள்வியாம். ஆனால் தமிழ்நாட்டில் எப்படியாவது ஒன்றிரண்டு லோக்சபா தொகுதிகளைப் பெற வேண்டிய கட்டாயம் இருப்பதால் ஏ.. கோவிந்தசாமி கதவை திற ரேஞ்சுக்கு அதிமுகவிடம் முட்டி மோதுகிறதாம் டெல்லி பாஜக மேலிடம்!












Click it and Unblock the Notifications