நீண்ட இழுபறிக்குப் பின் நெல்லை காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ்! விளவங்கோடு- தாரகை போட்டி!
சென்னை: லோக்சபா தேர்தலில் திருநெல்வேலி (நெல்லை) தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ராபர்ட் புரூஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக டாக்டர் தாரகை கத்பர்ட் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு, புதுச்சேரியில் மொத்தம் 7 தொகுதிகளுக்கு ஏற்கனவே காங்கிரஸ் மேலிடம் வேட்பாளர்களை அறிவித்தது.

தமிழ்நாட்டில் மயிலாடுதுறை, திருநெல்வேலி லோக்சபா தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவிப்பதில் இழுபறி நீடித்தது. இதேபோல விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளரையும் காங்கிரஸ் மேலிடம் அறிவிக்காமல் இருந்தது.
திருநெல்வேலியில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் வேட்பாளராகும் கனவில் இருந்து வந்தனர். காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், நாங்குநேரி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் உள்ளிட்ட பலரும் முட்டி மோதினர். இவர்களில் ராபர்ட் புரூஸ் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்பட்டு வந்தது. ஆனால் நெல்லை மாவட்டத்தைச் சேராத ராபர்ட் புரூஸ் வேட்பாளராக அறிவிக்கப்படக் கூடாது என திடீரென திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டமும் நடத்தினர்.
இந்த நிலையில் திருநெல்வேலி உள்ளிட்ட தொகுதிகளில் திமுக கூட்டணியின் தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். இதனால் திருநெல்வேலி வேட்பாளரை அறிவிக்க வேண்டிய நெருக்கடியில் சிக்கியது காங்கிரஸ்.
இதனையடுத்து திருநெல்வேலி லோக்சபா தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் ராபர்ட் புரூஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளராக டாக்டர் தாரகை கத்பர்ட் அறிவிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி லோக்சபா தொகுதியில் அதிமுக கூட்டணியில் அதிமுக வேட்பாளராக சிம்லா முத்துச் சோழன் முதலில் அறிவிக்கப்பட்டார். ஆனால் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டவர் சிம்லா முத்துச் சோழன் என்கிற விமர்சனங்கள் எழுந்ததால் அவர் மாற்றப்பட்டு ஜான்சி ராணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பாஜக கூட்டணியில் பாஜகவின் நயினார் நாகேந்திரன் வேட்பாளராக களம் காண்கிறார். நயினார் நாகேந்திரன், முதலில் தூத்துக்குடி வேட்பாளர் என அறிவிக்கப்பட்டு பின்னர் நெல்லை பாஜக வேட்பாளராக மாற்றப்பட்டார். தற்போது காங்கிரஸிலும் நீண்ட இழுபறிப்புக்குப் பின்னர் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வழக்கறிஞர் ராபர்ட் புரூஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications