லோக்சபா தேர்தல்- சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னம்- இயக்குநர் சேரன் ஆதரவு!
சென்னை: லோக்சபா தேர்தலில் மைக் சின்னத்தில் போட்டியிடும் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு திரைப்பட இயக்குநர் சேரன் ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் தமிழ்நாடு, புதுவையில் 40 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்தே களம் காண்கிறது. அண்மையில் 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஒரே மேடையில் சீமான் அறிமுகம் செய்தது பெரும் கவனத்தைப் பெற்றது.

சீமான் அறிவித்த வேட்பாளர்களில் பலர், வேட்பு மனுத் தாக்கலின் போது தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் பெயரால் உறுதி மொழி ஏற்றுக் கொண்டது பெரும் சர்ச்சையாகி உள்ளது. தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவர் பெயரால் உறுதி மொழி ஏற்றதால் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் செல்லுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
இதனிடையே சீமான் 2 தேர்தல்களில் பயன்படுத்தி வந்த கரும்பு விவசாயி சின்னம், கர்நாடகா லெட்டர் பேடு கட்சி ஒன்றுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட்டது. இது சீமான் தரப்புக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. கரும்பு விவசாயி சின்னத்தை பெறுவதற்கான சட்டப் போராட்டங்களை சீமானின் நாம் தமிழர் கட்சி மேற்கொண்டது. ஆனால் இந்த முயற்சிகள் பலன் தரவில்லை.

இந்த நிலையில்தான் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மைக் - ஒலிவாங்கி சின்னத்தை இன்று சென்னையில் செய்தியாளர்கள் கூட்டத்தில் சீமான் அறிமுகப்படுத்தினார். இதனையடுத்து மக்களிடம் மைக் சின்னத்தை கொண்டு சேர்ப்பதில் நாம் தமிழர் கட்சியினர் தீவிரமாக களமிறங்கி உள்ளனர்.
தற்போது சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் கிடைத்திருப்பதற்கு திரைப்பட இயக்குநர் சேரன் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சேரன் தமது சமூக வலைதளப் பக்கத்தில், இனிமேல் இந்தியாவில் எவரும் சீமானின் இந்த சின்னம் இல்லாமல் ஓட்டுக்கேட்டு போகமுடியாது... எல்லா கட்சி மேடைகளிலும் நாம் தமிழர் சின்னம் இருக்கும்.. எல்லா 'மைக்' கின் மூலமும் முழங்குவோம்.. ஊ"மைக்"கூட்டத்தின் விழிப்புணர்வுக்கு தோழ"மைக்"கூட்டம் எதுவென்று.. எனப் பதிவிட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியினர் சேரனின் இப்பதிவுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications