உ.பி.யில் தப்பிய "இந்தியா" கூட்டணி-தமிழகத்தில் நாளை திமுகவுடன் காங்.பேச்சுவார்த்தை- அடம் பிடிக்குமா?
சென்னை: உத்தரப்பிரதேசத்தில் "இந்தியா" கூட்டணி கட்சிகளான சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் இடையே சுமூகமான தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் நாளை திமுகவுடன் காங்கிரஸ் தொகுதி உடன்பாட்டு பேச்சுவார்த்தையை நடத்த உள்ளது. இத்தொகுதி உடன்பாடும் சுமூகமாக முடியுமா? என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
"இந்தியா" கூட்டணியில் காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, உத்தவ் தாக்கரே சிவசேனா, சரத்பவாரின் என்சிபி, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. லோக்சபா தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி, மாநிலங்களில் பெரிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

மே.வங்கம், பஞ்சாப்பில் உடைந்தது "இந்தியா" கூட்டணி: மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தியது. இம்மாநிலங்களில் காங்கிரஸுக்கு மிக மிக சொற்பமான இடங்களையே ஒதுக்க திரிணாமுல் காங்கிரஸும் ஆம் ஆத்மியும் முன்வந்தன. இதனை காங்கிரஸ் ஏற்க மறுத்தது. இதனால் திரிணாமுல் காங்கிரஸும் ஆம் ஆத்மியும் காங்கிரஸுடனான கூட்டணியை முறித்து கொள்வதாக அறிவித்தன. மேற்கு வங்கம், பஞ்சாப் மாநிலங்களில் திரிணாமுல் காங்கிரஸும் ஆம் ஆத்மியும் தனித்தே போட்டியிடுவதாகவும் அறிவித்துவிட்டன. மேற்கு வங்கத்தில் "இந்தியா" கூட்டணியில் உள்ள இடதுசாரிகளுடன் இணைந்து காங்கிரஸ் தேர்தலை சந்திக்க உள்ளது. பஞ்சாப்பில் தனித்தே போட்டியிடுகிறது காங்கிரஸ்.
உ.பி.யில் தப்பிய "இந்தியா": இதனைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையிலும் காங்கிரஸுக்கு ஒரு சில தொகுதிகளையே சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் விட்டுக் கொடுக்க முன்வந்தார். இதனால் உ.பி.யிலும் "இந்தியா" கூட்டணி உடையும் நிலைமை உருவானது. இந்த நிலையில் இன்று திடீரென தமது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், உ.பி.யில் காங்கிரஸுக்கு 11 தொகுதிகளை ஒதுக்க முடிவு செய்துள்ளோம்; இது தொடர்பாக காங்கிரஸுடனான பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்தது என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். இதனால் உத்தரப்பிரதேசத்தில் "இந்தியா" கூட்டணி உடையாமல் தப்பி இருக்கிறது.
திமுக- காங்கிரஸ் நாளை பேச்சுவார்த்தை: இத்தகைய பரபரப்புகளுக்கு இடையே தமிழ்நாட்டில் நாளை திமுகவுடன் காங்கிரஸ் கட்சி பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையிலான குழுவினர், திமுகவின் தேர்தல் தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். காங்கிரஸைப் பொறுத்தவரையில் அதிகபட்சமாக 18; குறைந்தபட்சம் 15 தொகுதிகளைக் கேட்க திட்டமிட்டுள்ளது. திமுகவோ 2019 லோக்சபா தேர்தலைப் போல காங்கிரஸுக்கு 8 முதல் 10 இடங்களை ஒதுக்க விரும்புகிறது. சென்னையில் நாளை தொடங்கும் பேச்சுவார்த்தை சுமூக உடன்பாட்டை நோக்கி செல்லுமா? இல்லையா? என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications