தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் வேட்புமனுதாக்கல் நிறைவு.. 1,749 மனுக்கள் மீது இன்று பரிசீலனை
சென்னை: தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிந்த நிலையில் இன்று அந்த வேட்புமனுக்கள் மீது பரிசீலனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர் ஆகிய 4 முனை போட்டி நிலவி வருகிறது.

தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு என பல கட்டங்களை முடித்த அரசியல் தலைவர்கள் தற்போது பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் தங்களது வேட்பாளர்களையும் கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து பிரச்சாரம் செய்யத் தொடங்கியுள்ளனர்.
இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ஆம் தேதி தொடங்கியது. கட்சி வேட்பாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு ஆட்டம், பாட்டம், வாணவேடிக்கைகளுடன் ஊர்வலமாக சென்று அவர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
இதில் பங்குனி உத்திர நாளான 25ஆம் தேதி மிகவும் நல்ல நாள் என்பதால் அன்றைய தினம் அதிமுக வேட்பாளர்கள் 33 பேரும் மனுக்களை தாக்கல் செய்தனர். அது போல் திமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும் அதே நாளில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
அன்று மட்டும் ஒரே நாளில் 403 பேர் வேட்புமனுதாக்கல் செய்திருந்தனர். நேற்று முன் தினமும் வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடந்தது. இந்த நிலையில் நேற்றுடன் வேட்புமனுதாக்கல் முடிந்தது. இதனால் தேர்தல் அலுவலகங்களில் காலை முதல் பிற்பகல் 3 மணி வரை ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
சில இடங்களில் 3 மணிக்கு பிறகு வந்தவர்களுக்கும் டோக்கன் கொடுக்கப்பட்டு அவர்களை ஒன்றன் பின் ஒன்றாக அழைக்கப்பட்டது. தென் சென்னையில் 28 மனுக்களும், மத்திய சென்னையில் 22 மனுக்களும் வடசென்னையில் 31 மனுக்களும் தாக்கலாகியுள்ளது. இப்படி தமிழகம் முழுவதும் 39 தொகுதிகளில் 1,749 மனுக்கள் தாக்கலாகியுள்ளது.
அது போல் விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் நிலையில் அங்கு 18 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை செய்யப்படுகிறது. அந்தந்த தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள பொது பார்வையாளர்கள் முன்பு வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும்.
முறையாக கையெழுத்து போடப்படாத, ஆவணங்கள் இணைக்கப்படாத மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும். மனுக்களை வாபஸ் பெற விரும்புவோர் 30-ஆம் தேதிக்குள் வாபஸ் பெற வேண்டும். அதன் பின்னர் அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.












Click it and Unblock the Notifications