தமிழ்நாட்டில் நாளை வாக்குப் பதிவு... இப்படியும் 20 கட்சிகள் களத்தில் இருப்பது தெரியுமா?
சென்னை: 18-வது லோக்சபா தேர்தலின் முதல் கட்டமாக நாட்டின் 21 மாநிலங்களில் 102 லோக்சபா தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாடு, புதுவையின் 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
18-வது லோக்சபா தேர்தல் நாளை ஏப்ரல் 19-ந் தேதி தொடங்கி ஜூன் 1-ந் தேதி வரை நடைபெற உள்ளது. ஜூன் 4-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். முதல் கட்டமாக நாளை 102 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

தமிழ்நாடு உட்பட 17 மாநிலங்கள், புதுச்சேரி உட்பட 4 யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 102 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் புதுச்சேரியில் ஒரு தொகுதியிலும் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
102 லோக்சபா தொகுதிகளில் 8 மத்திய அமைச்சர்கள், ஓ.பன்னீர்செல்வம் உட்பட 3 முன்னாள் முதல்வர்கள், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் களம் காண்கின்றனர்.
தமிழ்நாட்டின் 39 லோக்சபா தொகுதிகளிலும் போட்டியிடும் ஒரே தேசிய கட்சி மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி.
நாளை வாக்குப் பதிவு நடைபெறும் 102 தொகுதிகளில் பாஜக 77-ல் போட்டியிடுகிறது.
102 தொகுதிகளில் காங்கிரஸ் 56 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் உட்பட மொத்தம் 86 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடுகிறது. 2019-ம் ஆண்டு தேர்தலில் 383 இடங்களில் போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சி 10 இடத்தில் வென்றது. அக்கட்சி பெற்ற வாக்கு சதவீதம் 3.66%.
முதல் கட்ட தேர்தலை எதிர்கொள்கிறது நாட்டின் வடமுனையான ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் லோக்சபா தொகுதி. அதே போல நாட்டின் தென்முனையான தமிழ்நாட்டின் கன்னியாகுமரி லோக்சபா தொகுதியிலும் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவருமான ஓ.பன்னீர்செல்வம், ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறார். ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் மேலும் 5 சுயேட்சைகள் இதே தொகுதியில் களம் காண்கின்றனர்.
முதல் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளிலேயே தமிழ்நாட்டின் கரூர் லோக்சபா தொகுதியில்தான் மிக அதிகபட்சமாக 54 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இவர்களில் 46 பேர் சுயேட்சைகள்.
முதல் கட்டதேர்தல் நடைபெறும் தொகுதிகளிலேயே மிக குறைந்தபட்சமாக வெறும் 3 வேட்பாளர்கள் போட்டியிடுவது அஸ்ஸாமின் திப்ரூகர் லோக்சபா தொகுதிதான். இங்குதான் மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் போட்டியிடுகிறார்.
தமிழ்நாட்டின் பல தொகுதிகளில் போட்டியிடும் இதுவரை அறியப்படாத 20 கட்சிகள்:
- தமிழ் மாநில முற்போக்கு திராவிட கழகம்
- வீரத் தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளிகள் கட்சி
- இந்திய ஐக்கிய குடியரசுக் கட்சி
- அண்ணா எம்ஜிஆர் திராவிட மக்கள் கழகம்
- அகில இந்திய ஜனநாயக மக்கள் கழகம்
- Viro Ke Vir இந்தியக் கட்சி
- தக்கம் கட்சி
- ஊழல் எதிர்ப்பு டைனமிக் கட்சி
- திப்பு சுல்தான் கட்சி
- நாடாளும் மக்கள் கட்சி
- தேசிய மக்கள் சக்தி கட்சி
- தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு பேரியக்கம்
- சென்னை இளைஞர் கட்சி
- இந்திய குடியரசு கட்சி (சிவராஜ்)
- அறவோர் முன்னேற்றக் கழகம்
- தேசிய மகா சபா கட்சி
- மகாத்மா மக்கள் முன்னேற்றக் கழகம்
- தமிழக முற்போக்கு மக்கள் கட்சி
- Hardam Manavtawadi ராஷ்ட்ரிய தளம்
- ஜெபமணி ஜனதா












Click it and Unblock the Notifications