"பாஜகவால் தமிழ்நாட்டை ஆளவே முடியாது.." 40க்கு 40ல் திமுக+ முன்னிலை.. ராகுல் பழைய வீடியோ டிரெண்டிங்
சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே முன்னிலை பெற்றுள்ள நிலையில், தமிழ்நாடு குறித்து ராகுல் காந்தி பேசும் பழைய வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்தது. அதில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. தேசியளவில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைப்பது போலத் தெரியவில்லை.

பாஜக சுமார் 240 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதனால் கடந்த இரண்டு முறைகளைப் போல இல்லாமல் இந்த முறை கூட்டணி ஆட்சி அமைவது உறுதியாகி உள்ளது.
திமுக கூட்டணி முன்னிலை: தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பெரும்பாலான தொகுதிகளில் திமுக கூட்டணியே முன்னிலையில் இருந்தது. இருப்பினும், ஓரிரு தொகுதிகளில் மட்டும் வேறு கட்சிகள் முன்னிலையில் இருந்தது. குறிப்பாக நெல்லை மற்றும் தர்மபுரி. ஆனால், வாக்கு எண்ணிக்கை தொடரவே இப்போது அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.
பழைய பேச்சு: இதன் மூலம் கடந்த 2019ஐ போலவே மீண்டும் 40க்கு 40 என்ற க்ளீன் ஸ்வீப் வெற்றியைப் பெறும் சூழல் திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே ராகுல் காந்தியின் பழைய பேச்சு ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இது தொடர்பாக நாம் பார்க்கலாம்.
ராகுல் காந்தி: கடந்த 2022ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ராகுல் காந்தியின் பேச்சு தான் இது.. அப்போது பேசிய ராகுல் காந்தி, "இந்த நாட்டிற்கு மொத்தம் இரண்டு விஷன்கள் உள்ளன.. ஒரு பார்வை தான் இந்த தேசம் மாநிலங்களால் ஆனது என்பது.. இதில் உரையாடல் அல்லது பேச்சுவார்த்தை மூலமாகவே அனைத்தும் மேற்கொள்ளப்படும்.
அதாவது நான் தமிழ்நாட்டில் உள்ள என் சகோதரனிடம் சென்று, 'உனக்கு என்ன வேண்டும்?' எனக்குத் தேவைப்படுவது' என்று கேட்பேன். அதற்கு அவர் தனக்கு என்ன வேண்டும் என்பதைச் சொல்வார்.. அவர் என்னிடம் என்ன வேண்டும் எனக் கேட்பார்.. அதை நான் சொல்வேன். ஒரு பாட்னர்ஷிப் போலவே இது செயல்படும்.
ஆளவே முடியாது: இது ஒன்றும் மன்னராட்சி இல்லை.. அதை நீங்கள் புரிந்து கொள்ள மாட்டீர்கள். இதன் காரணமாகவே நான் சொல்கிறேன்... உங்கள் வாழ்நாளில் நீங்கள் ஒருபோதும் தமிழக மக்களை ஆள மாட்டீர்கள். அதை உங்களால் செய்ய முடியாது" என்று பேசியிருந்தார். இது தவிர இந்தியாவில் பணக்கார இந்தியா ஏழை இந்தியா என இரு வகை இந்தியா இருப்பதாகவும் பாஜக அரசின் நடவடிக்கைகளால் இரு தரப்பிற்கும் இடையேயான இடைவெளி தொடர்ந்து அதிகரித்தே வருவதாகவும் ராகுல் காந்தி பேசியிருந்தார்.
இப்போது தமிழ்நாடு + புதுச்சேரியில் உள்ள 40இல் 40 தொகுதிகளிலும் இப்போது திமுக- காங்கிரஸ் கூட்டணியே முன்னிலையில் இருக்கும் நிலையில், ராகுல் காந்தியின் இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. காங்கிரஸ் மற்றும் திமுக ஆதரவாளர்கள் இந்த வீடியோவை வேகமாகப் பரப்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications