வென்று காட்டிய சீமான்! நின்று காட்டிய நாம் தமிழர்! திராவிட அரசியலுக்கு மாற்றா இவர்?
சென்னை: சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் கிடைத்திருப்பதன் மூலம் தமிழ்நாட்டில் தமிழ்த் தேசிய அரசியலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தல் முடிவு மோடிக்கும் பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவுக்கு நாம் தமிழர் கட்சிக்கு மாபெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது என்பது அதை விட உண்மை.

தமிழ்நாட்டில் பெரிய கட்சிகள் என்று கணக்குப் போட்டால், அதிமுக மற்றும் திமுக மட்டுமே உள்ளன. அதற்குப் பின்பாக பல கட்சிகள் தோன்றி மறைந்துவிட்டன. 1949இல் தொடங்கப்பட்ட மிகப் பழமையான மாநிலக் கட்சி திமுக. அதிமுக கிட்டத்தட்ட 1970களுக்குப் பின்னர் உருவான கட்சி.
ஆனால், அது திமுகவைவிட அதிக அளவுக்கு வாக்கு வங்கியை உருவாக்கிக் கொண்டது. அதற்குக் காரணம், எம்.ஜி.ஆர். அவருக்குப் பின்னர் அதைவிட ஒரு உச்சத்தை அதிமுகவைத் தொட வைத்தவர் ஜெயலலிதா. திமுகவாக இருந்தாலும், அதிமுகவாக இருந்தாலும் எந்தத் தேர்தலிலும் கூட்டணி அமைத்தே இதுவரைப் போட்டியிட்டு வருகின்றன.
ஒருசில தேர்தல்களில் விதிவிலக்காக அதிமுக தனித்து நின்றிருக்கலாம். ஆனால் பெருவாரியான தேர்தல்களில் இந்த இரண்டு பெரிய கட்சிகளும் கூட்டணி பலத்துடனே மோதியுள்ளன.

தேர்தல் பாதையே வேண்டாம் என இயக்கமாக மட்டுமே இயங்கிவந்த விடுதலை சிறுத்தைகள் அரசியல் இயக்கமாக ஆன போது மூப்பனாருடன் கூட்டணி அமைத்தே போட்டியிட்டது.
அதேபோல மதிமுக தொடங்கி பாமக வரை தமிழ்நாட்டில் கூட்டணி வைத்துப் போட்டிடாத கட்சிகளே இல்லை. அப்படியான ஒரு சூழ்நிலையில்தான் நாம் தமிழர் கட்சி கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்னால் தனித்துப் போட்டியிடும் ஒரு தனித்துவமான அரசியல் பாதைக்குத் தமிழ்நாட்டில் அடித்தளம் போட்டது.
திராவிடக் கட்சிகள் மட்டுமே தமிழ்நாட்டில் உயிர்பிழைக்கும் என்பது எழுதப்படாத விதியாக, இருந்த காலத்தில் திடீரென்று தோன்றிய விஜயகாந்த்தின் தேசிய திராவிடர் முன்னேற்றக் கழகம் கூட, இறுதியாக ஜெயலலிதாவின் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது.
அப்படியான சூழலில் தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளின் கூட்டணி இல்லாமல் ஒரு கட்சி உயிர் பிழைப்பது கடினம் என்றே நம்பப்பட்டும் வந்தது. சில ஆண்டுகள் முன்னதாக அரசியல் கட்சி தொடங்கிய கமல்ஹாசன் கூட இறுதியில், திமுகவிடமும் காங்கிரசிடமும் போய் கூட்டணி அமைக்க வேண்டிய காலம் வந்தது.
இத்தனை முன்னோடி கட்சிகளிடம் இருந்து பாடங்களைப் படித்துக் கொண்ட நாம் தமிழர் கட்சி சீமான், கடந்த 14 வருடங்களாகத் தனித்தே தேர்தல்களில் களம் கண்டு வருகிறார்.

கமல்ஹாசனின் அரசியல் வருகையை ஏற்று அவருடன் கூட்டணி பேச்சுக்கு எல்லாம் போன சீமான், பிறகு தனித்தே தேர்தலைச் சந்தித்தார். அதே நேரம் கட்சித் தொடங்க இருப்பதாக இருந்த ரஜினிகாந்த்தை மிகக் கடுமையாக விமர்சித்தார்.
இந்நிலையில்தான் திராவிடக் கட்சிகளுக்கு எதிராகத் தமிழ்த் தேசிய கருத்தியலை முன்னிறுத்தி வந்த சீமான், இந்தத் தேர்தலில் 8.10% வாக்குகளைப் பெற்று மாநிலக் கட்சிக்கான அங்கீகாரத்தைப் பெற உள்ளார்.
அதாவது திராவிட மண், இது பெரியார் மண் என்று கொண்டாடப்பட்டு வந்த பூமியில் திராவிடக் கட்சியை விமர்சித்து, பெரியாரையும் கடுமையாக விமர்சித்து தனது கட்சிக்குத் தமிழக மக்கள் மத்தியில் ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார் சீமான்.
சீமானை வீழ்ந்த பல கட்சிகள் முயன்றன. அவருக்கு திமுக தரப்பிலிருந்தும் பாஜக தரப்பிலிருந்து பல அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன என்ற கருத்து பரவலாக முன்வைக்கப்படுகிறது.
குறிப்பாகச் சொன்னால், இந்த மக்களவைத் தேர்தல் களத்தில் அவரது விவசாயி சின்னத்தைத் தராமல் சில நெருக்கடிகள் தரப்பட்டன. முன்பு வருபவருக்குத்தான் சின்னம் என்ற அடிப்படையில் காரணம் காட்டி, ஏதோ ஒரு புதிய கட்சிக்கு அதனைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.
அதன் பின்னதாக பாஜகவின் சதி இருப்பதாகச் சீமான் மேடை தோறும் முழங்கினார். அவருக்கு புதியதாக மைக் சின்னம் ஒதுக்கப்பட்டது. அது அந்தக் கட்சியின் தலைவருடன் இணைந்த அடையாளம். அதை வைத்துத்தான் சீமான் கட்சியை இத்தனைக் காலம் கட்டிக்காப்பாற்றி வந்துள்ளார்.
பாஜக மறைமுகமாகச் சதிசெய்து சின்னத்தை அபகரித்தது எனக் குற்றஞ்சாட்டினாலும் அவருக்கு புதிய மைக் சின்ன இதுவரை இல்லாத அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துள்ளது.
அதற்குக் காரணம் மோடி எதிர்ப்பு. அது கூடுமானவரை வேலை செய்துள்ளது என்றே சொல்ல வேண்டும். இந்தத் தேர்தலில் அவரது கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும் அளவுக்கு வாக்கு வங்கி உயர்ந்துள்ளதோடு, அவரது 7 வேட்பாளர்கள் கிட்டத்தட்ட ஒரு லட்சம் வாக்குகளை வாங்கியுள்ளனர். ஒரு வேட்பாளர் இதையும் தாண்டி 1 லட்சத்து 63 ஆயிரம் ஓட்டுகளைப் பெற்றுள்ளார்.
இது திமுக மற்றும் அதிமுகவுக்கு மாற்றான ஒரு கொள்கையை மக்கள் தேடுகிறார்கள் அல்லது விரும்புகிறார்கள் என்பதை நிரூபித்துள்ளது. மேலும் இளம் தலைமுறையை வசீகரிக்கக் கூடிய தலைவராகச் சீமான் மாறி இருக்கிறார்.
அவரது பேச்சுக்களைக் கிண்டலாகக் கூட சமூக வலைத்தளங்களில் நடித்துக் காட்டி பதிவிட்டு வரும் ஒரு தலைமுறை உண்டாகி இருக்கிறது.
தமிழக மேடைப் பேச்சுக்களை வெளிநாட்டு ஆய்வாளர் பேராசிரியர் பார்னி பேட் என்பவர், (அவரை பெர்னார்ட் பேட் என்று கூறுவர்) என்பவர் ஆய்வு செய்துள்ளார். வருங்காலத்தில் தமிழ்நாட்டில் மேடைப் பேச்சு பற்றிய ஆய்வை யார் நடத்தினாலும் அதில் சீமானின் பெயர் கட்டாயம் இருக்கும்.
அந்தப் பட்டியலில் மட்டும் இல்லை. எந்தப் பின்புலமும் இல்லாமல் தனது பேச்சை மட்டுமே நம்பி ஒருவர் தனது கட்சிக்குத் தமிழ்நாட்டு மக்களிடம் அங்கீகாரம் பெற்றார் என்ற வரலாற்றுப் பதிவிலும் இவரது பெயர் நீங்காமல் இடம்பெறும். அப்போது தமிழ்நாட்டில் தமிழ்த் தேசிய அரசியல் வாரிசாக இவர் முகம் முன்மொழியப்படும்.
அதை உணர்ந்துதான் இதுவரை சீமானின் கட்சி பற்றி வாய் திறக்காத ரஜினிகாந்த் வாழ்த்துக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications