2021-ல் கிடைக்காத "காசு" கிடைச்சுருச்சு.. நாம் தமிழர் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் சீமான்!
சென்னை: 18-வது லோக்சபா தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டார்.
நாம் தமிழர் கட்சி ஒவ்வொரு தேர்தலிலும் தனித்துதான் போட்டியிடுகிறது. நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்ட போது வெளியிடப்பட்ட ஆவணமே பல்வேறு சர்ச்சைகளை எதிர்கொண்டது. 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கும் வரை நாம் தமிழர் கட்சி தேர்தல் அறிக்கையையே வெளியிடவில்லை.

2021-ல் நாம் தமிழர் கட்சி தேர்தல் அறிக்கையை ஏன் வெளியிடவில்லை என அப்போது செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், போதிய நிதி வசதி இல்லாததால் இத்தேர்தலில் எங்கள் கட்சியின் ஆட்சி செயற்பாட்டு வரைவு எனப்படுகிற தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை என தெரிவித்தார். சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியினரின் இந்த விளக்கம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது.
தற்போதைய தேர்தலின் தொடக்கத்திலேயே நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் பெரிய சிக்கலாகிப் போனது. நாம் தமிழர் கட்சியினர் கேட்டுக் கொண்ட கரும்பு சின்னம், கர்நாடகா லெட்டர் பேடு கட்சிக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. இதற்காக பெரும் போராட்டம் நடத்திய நிலையில் வேறு வழியே இல்லாமல் மைக் சின்னத்தை (ஒலிவாங்கி) பெற்றுள்ளது நாம் தமிழர் கட்சி.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான், மைக் சின்னத்தை அறிமுகப்படுத்தினார். அத்துடன் திடீரென நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையையும் இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டார் சீமான்.
நாம் தமிழர் கட்சியினர் மைக் சின்னம் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் அதனை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். அதே நேரத்தில் சீமான் வெளியிட்ட தேர்தல் அறிக்கை குறித்து கனத்த மவுனமாக கடந்து போய் வருகின்றனர் நாம் தமிழர் கட்சி தம்பிகள்.
சீமான் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில்,
ஆட்சியாளர்கள்- அரசு ஊழியர்களின் குழந்தைகள் கட்டாயம் அரசு பள்ளியில் படிக்க வேண்டும்
படிக்காதவர்களுக்கும் அரசு வேலை கிடைக்கும்
தெற்கு ரயில்வேயில் காலிப் பணியிடங்களில் தமிழர்களுக்கு 90% ஒதுக்கீடு
சென்னை ஐசிஎப் பணிகளிலும் தமிழருக்கு முன்னுரிமை என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.
இது தொடர்பாக சீமான் தமது சமூக வலைதளப் பக்கத்தில், எதிர்வரும் ஏப்ரல் 19 அன்று, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நடைபெறவிருக்கும் 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தலுக்கும், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கும் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவருக்கும் பொதுச்சின்னமாக தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள ஒலிவாங்கி (Mike - மைக்) சின்னத்தையும், நாடாளுமன்றத் தேர்தல் வரைவையும் இன்று (27-03-2024) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் வெளியிட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications