ஜிகே வாசனின் தமாகவுக்கு 3 லோக்சபா தொகுதி ஒதுக்கீடு.. பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு
சென்னை: வரும் லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் பாமக, டிடிவி தினகரனின் அமமுக, ஓபிஎஸ் அணி, ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ், ஏசி சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி, பெரம்பலூர் எம்பி பாரி வேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி, ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், தேவநாதனின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் உள்ளிட்டவை அங்கம் வகிக்கின்றன.

இதில் ஏசி சண்முகத்தின் புதிய நீதிக்கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாமகவுக்கு 10 தொகுதிகளும், அமமுகவுக்கு 2 தொகுதியும், ஜான்பாண்டியன், தேவநாதன் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான தொகுதி இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
அதேபோல் ஓ பன்னீர் செல்வம் அணி மற்றும் ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் இடையே தொகுதி பங்கீடுகளில் பாஜகவுக்கு பிரச்சனை உள்ளது. இவர்கள் 2 பேருடன் இன்னும் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. இந்நிலையில் தான் ஓ பன்னீர் செல்வம் மற்றும் ஜிகே வாசன் ஆகியோர் தங்கள் கட்சி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே தான் இன்று சென்னை கமலாலயத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜக உயர்நிலை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் வேட்பாளர்களை இறுதி செய்வது, தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து தமிழ்நாட்டில் பாஜக சார்பில் போட்டியிட உள்ள 20 வேட்பாளர்களின் பட்டியலோடு பாஜக தலைவர் டெல்லி புறப்பட்டு உள்ளனர்.
முன்னதாக உயர்நிலை கூட்டம் முடிவைடைந்த பிறகு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் 39 தொகுதிகளுக்கான தொகுதி பங்கீடு நிறைவு செய்யப்பட்டுள்ளது. சுமூகமான முறையில் தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ளது.
தமிழ்நாட்டில் 20 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். மேலும் 4 தொகுதிகளில் பாஜகவின் தாமரை சின்னத்தில் கூட்டணி வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். மொத்தம் 24 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலுடன் டெல்லி செல்கிறோம். பாஜக கூட்டணியில் ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரசுக்கு 3 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஓ பன்னீர் செல்வம் முடிவு பற்றி நான் அறிவிப்பது நன்றாக இருக்காது. ஓ பன்னீர் செல்வம் அவரது நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அவர் பேட்டியளித்து முடிவை விரைவிலேயே அறிவிப்பார். அதன்பிறகு நான் அதுபற்றி பேசுகிறேன். பாஜகவில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் இன்று அல்லது நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்'' என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications