தலைவரே... திமுகவிடம் 15 தொகுதிகள் கேட்போம்.. கே.எஸ். அழகிரியை தூண்டிவிட்ட காங். மாவட்ட 'தலை'கள்!
சென்னை: லோக்சபா தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 15 தொகுதிகள் வழங்க வலியுறுத்த வேண்டும் என சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
லோக்சபா தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளைக் கொண்ட 'இந்தியா' கூட்டணி உருவாக்கப்பட்டது. தற்போது 5 மாநில சட்டசபை தேர்தல்களில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக களமிறங்கியதால் 'இந்தியா' கூட்டணிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு காங்கிரஸ் ஆலோசனை: அதேநேரத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் 'இந்தியா' கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு தொடர்பான அதிகாரப்பூர்வமற்ற பேச்சுகள், ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாவட்ட தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்துக்கு முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் அழைக்கப்படாதது பெரும் சர்ச்சையாகவும் வெடித்தது.
10 தொகுதிகள்: இந்த நிலையில் சென்னையில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் திமுக கூட்டணியில் எத்தனை தொகுதிகள் கேட்கலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் 9; புதுச்சேரியில் 1 தொகுதி என மொத்தம் 10 தொகுதிகளை திமுக தலைமை காங்கிரஸுக்கு ஒதுக்கியது. இந்த முறை இந்த 10 தொகுதியையும் அப்படியே வாங்கிவிட வேண்டும் என இந்தக் கூட்டத்தில் ஒருதரப்பினர் வலியுறுத்தினர்.
15 தொகுதிகள்: அதேநேரத்தில் 2009-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸுக்கு 15 தொகுதிகள் கொடுத்தனர். இப்போதும் அந்த 15 தொகுதிகளை நாம் கேட்டுப் பெற வேண்டும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமையும் போது தமிழ்நாட்டில் கணிசமான எம்.பி.க்கள் இருக்க வேண்டும் எனவும் ஒருதரப்பு மாவட்ட தலைவர்கள் வலியுறுத்தினர்.
சிங்கிள் டிஜிட்தான்: இது தொடர்பாக திமுக வட்டாரங்களில் நாம் பேசிய போது, லோக்சபா தேர்தலில் காங்கிரஸுக்கு இந்த முறை கட்சித் தலைமை நிச்சயம் சிங்கிள் டிஜிட் இடங்களைத்தான் கொடுக்கப் போகிறது. திமுக தலைமையானது 5 முதல் 7 தொகுதிகளை வரைத்தான் தர விரும்புகிறது. டெல்லி காங்கிரஸ் மேலிடம் ஏதேனும் நெருக்கடி கொடுத்தால் அதிகபட்சம் 8 தொகுதிகள்தான் காங்கிரஸுக்கு கிடைக்கும். அவர்கள் நினைப்பது போல 15 தொகுதிகள் கொடுத்த காலம் எல்லாம் மலையேறிவிட்டது என்கின்றன.
திமுக- காங்கிரஸ் கூட்டணி: 2004-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அத்தேர்தலில் திமுக அணியில் பாமக இடம் பெற்றிருந்தது. அக்கட்சிக்கு 5 தொகுதிகள் வழங்கப்பட்டன; 2009-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் திமுக அணியில் காங்கிரஸ் கட்சி 15 தொகுதிகளைப் பெற்றது. இதில் 8 தொகுதிகளில் காங்கிரஸ் வென்றது. 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் திமுக, அதிமுக அணியில் இடம் பெறாமல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு அத்தனை தொகுதிகளிலும் தோற்றது. 2019 லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் 9 தொகுதிகளிலும் புதுச்சேரியில் 1 தொகுதியிலும் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்டது காங்கிரஸ். தமிழ்நாட்டில் 8 தொகுதிகளில் வென்றது காங்கிரஸ். புதுச்சேரியில் 1 தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. தமிழ்நாட்டில் 2019 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி மொத்தம் 12.61% வாக்குகளைப் பெற்றது.












Click it and Unblock the Notifications