பாஜக கூட்டணியில் பாமகவிற்கு 10 தொகுதிகள்.. அதிகாலையில் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது
சென்னை: பாஜக - பாமக இடையே கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், அதை உறுதிப்படுத்தும் வகையில் இன்று தைலாபுரம் இல்லத்தில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது
லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது. திமுக கூட்டணியில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிந்து போட்டியிடும் தொகுதிகளும் அறிவிக்கப்பட்டன. மறுபக்கம் அதிமுக கூட்டணியை இறுதி செய்ய முடியாமல் தவிக்கிறது.

அதிமுக கூட்டணியில் தேமுதிக மட்டுமே பெரிய கட்சியாக இடம் பெறும் எனத் தெரிகிறது. பாமக பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், நேற்று திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில், பாஜக கூட்டணியில் இணைவது உறுதியானது. இந்த நிலையில் இன்று காலை பாஜக - பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. தைலாபுரம் இல்லத்தில் ராமதாஸ் - அண்ணாமலை ஆகியோர் தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
பாஜக கூட்டணியி பாமகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அந்த 10 தொகுதிகள் என்னென்ன என்பது நாளை முடிவாகும் என்று தெரிகிறது.
இதேபோல் சேலத்தில் இன்று நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் ராமதாஸ் உள்பட கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களையும் மேடையேற்ற பாஜக திட்டமிட்டுள்ளது. இதனால், பாமக போட்டியிடும் தொகுதிகளும் இன்றே அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்தில் இன்னும் சற்று நேரத்தில் பாஜக - பாமக தொகுதி பங்கீடு கையெழுத்தாகிறதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, லோக்சபா தேர்தல் குறித்த அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் கடந்த வாரம் வெளியிட்டது. மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடக்க உள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையைத் தீவிரப்படுத்தியுள்ளன. திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் என தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிலவ உள்ளது.
இதில் திமுக கூட்டணியில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன. பாஜக இன்றே கூட்டணி பேச்சுவார்த்தையை முடிக்க முனைப்பு காட்டி வருகிறது. அதிமுகவுடன் பேசி வந்த பாமகவை தனது வலையில் விழ வைத்தது பாஜக. அந்த வகையில் இன்று பாமக- பாஜக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
முன்னதாக பாமக ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாலு சில முக்கிய தகவல்களை தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய பாலு, "உயர்மட்ட குழுக் கூட்டமும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டமும் நடைபெற்றது. தேர்தல் கூட்டணி குறித்து மருத்துவர் ராமதாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்" என்று பேசினார்.












Click it and Unblock the Notifications