தொகுதி பங்கீட்டில் மமதா போல ஸ்டாலின் 'தெறிக்க' ஓட விடுவாரோ? தமிழக காங். தலைவர்களுக்கு டெல்லி சம்மன்!
சென்னை: தமிழ்நாட்டிலும் லோக்சபா தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டு நடவடிக்கைகளை காங்கிரஸ் தொடங்கிவிட்டது. இதன் முதல் கட்டமாக தமிழ்நாட்டின் 5 காங்கிரஸ் தலைவர்களை டெல்லிக்கு வருமாறு காங்கிரஸ் மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது.
லோக்சபா தேர்தலை எதிர்கொள்வதற்காக "இந்தியா" கூட்டணியை எதிர்க்கட்சிகள் உருவாக்கி உள்ளன. "இந்தியா" கூட்டணியில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 28 கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

லோக்சபா தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இதனால் அனைத்து மாநிலங்களிலும் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைகளை விரைவாக முடிக்க வேண்டும் என டெல்லியில் டிசம்பர் 19-ல் நடைபெற்ற "இந்தியா" கூட்டணி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல மாநிலங்களில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை காங்கிரஸ் மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் 2019 லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் காங்கிரஸ் 8 தொகுதிகளில் வென்றது. இந்த முறை காங்கிரஸ் தரப்பில் 15 தொகுதிகள் வரை கேட்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் திமுக தரப்போ கடந்த முறையை விட ஒரு சில தொகுதிகள் குறைவாக தரக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசத்தில் ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு சிங்கிள் டிஜிட்டிலும் சொற்ப எண்ணிக்கைதான் என மமதாவும் அகிலேஷ் யாதவும் கறாராக கூறிவிட்டனர். தமிழ்நாட்டிலும் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினும் அதே பாணியில் காங்கிரஸுக்கு சிங்கிள் டிஜிட்.. ஆனாலும் 6 அல்லது அதிகபட்சம் 8 தொகுதிகள்தான் என சொல்வாரோ என்கிற அச்சம் காங்கிரஸ் தலைவர்களிடம் இருந்து வருகிறது.

இந்த பின்னணியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் சட்டசபை குழு தலைவர் செல்வப் பெருந்தகை, மூத்த தலைவர் ப.சிதம்பரம் எம்.பி, மாணிக்கம் தாகூர் எம்.பி, டாக்டர் செல்லக்குமார் எம்.பி ஆகியோரை டெல்லிக்கு வருமாறு காங்கிரஸ் மேலிடம் அழைத்துள்ளது. டெல்லியில் வரும் 29,30 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் ஆலோசனை நடத்த உள்ளனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் வெல்லும் வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? திமுக தலைமை எத்தனை தொகுதிகளை ஒதுக்கக் கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன? திமுகவுடனான பேச்சுவார்த்தையில் எத்தனை தொகுதிகளை கேட்பது? இறுதி முடிவாக எத்தனை தொகுதிகளை ஏற்றுக் கொண்டு பேச்சுவார்த்தையை நிறைவு செய்வது? என்பது உள்ளிட்டவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தொடங்க இருப்பதால் இதர திமுக கூட்டணி கட்சிகளும் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றன.












Click it and Unblock the Notifications