மீண்டும் மீண்டும் தள்ளிப்போகும் பாஜக - அதிமுக கூட்டணி பேச்சு.. இந்த ஒரு விஷயம்தான் காரணம்!
தமிழகத்தில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தாமல் காலம் தாழ்த்தி வருகிறது.
Recommended Video
சென்னை: தமிழகத்தில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தாமல் காலம் தாழ்த்தி வருகிறது. பல முக்கிய காரணங்களால் பேச்சுவார்த்தை தள்ளிப்போவதாக கூறுகிறார்கள்.
லோக்சபா தேர்தலுக்காக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. தமிழகத்தில் பாஜக யாருடன் கூட்டணி வைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகம் ஆகி இருக்கிறது.
தமிழகத்தில் பாஜக இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை. அதிமுகவுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் பாஜக பேச்சுவார்த்தையை தள்ளிபோட்டுக்கொண்டே இருக்கிறது.
மூன்று முறைக்கும் மேல்
பாஜகவின் தமிழக பொறுப்பாளர் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்தான் தமிழகத்தில் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக இருந்தது. ஆனால் இந்த பேச்சுவார்த்தை தொடர்ந்து மூன்று முறை தள்ளிப்போய் இருக்கிறது. பொங்கலுக்கு முன்பு ஒருமுறையும், பொங்கலுக்கு பின் இரண்டு முறையும் பேச்சுவார்த்தை தள்ளிப்போனது.
மீண்டும்
இந்த நிலையில்தான் கடந்த 27ம் தேதி பாஜக அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என்று கூறினார்கள். தமிழகத்திற்கு பிரதமர் மோடி வந்து சென்ற பின் இரவு இந்த பேச்சுவார்த்தை நடக்கும் என்று கூறினார்கள். ஆனால் அன்றோ, அதற்கு மறுநாளோ எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. பியூஸ் கோயல் தமிழகம் பக்கமும் வரவில்லை.
என்ன காரணம்
இதற்கு ஒரே காரணம்தான் சொல்லப்படுகிறது. ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் எப்படி தீர்ப்பு வருகிறது என்பதை பொறுத்தே கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கும் என்று கூறுகிறார்கள். அந்த வழக்கில் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று தீர்ப்பு வந்தால் அது அதிமுகவிற்கு பெரிய பின்னடைவாகும்.
ஆட்சியே கவிழும்
அப்படி நடக்கும் பட்சத்தில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி கவிழ கூட வாய்ப்பு இருக்கிறது. இதனால் பாஜக அதிமுகவுடனான பேச்சுவார்த்தையை தள்ளிப்போட்டு வருவதாக கூறப்பட்டு இருக்கிறது. இந்த தீர்ப்பு ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு எதிராக வந்தால் பாஜக கூட்டணியே வேண்டாம் என்று சொல்லவும் வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
ஒரு வாரம்
இன்னும் 10 நாட்களுக்குள் இந்த வழக்கில் தீர்ப்பு வர வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இதனால்தான் பாஜகவும் பேச்சுவார்த்தையை தொடங்காமல் உள்ளது. பொதுவாக மாநிலத்தில் ஆளும் கட்சியுடன்தான் கூட்டணி வைத்து பாஜக தேர்தலை சந்திக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.