திமுக சார்பில் விருப்ப மனு… மேலும் ஒரு நாள் நீட்டிப்பு
Recommended Video
சென்னை: நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 21 சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் பெறப்படும் தேதியை திமுக மேலும் ஒரு நாள் நீட்டித்திருக்கிறது.
தேர்தலில் போட்டியிட மனு கொடுத்தவர்களிடம் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நேர்காணல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கு பிப்ரவரி 25 ஆம் தேதியில் இருந்து விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட மனுக்கள் மார்ச் 1 ஆம் தேதியிலிருந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் பெறப்படுகின்றன. இன்று வரை விருப்ப மனுக்கள் பெறப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நாளை மாலை 5 மணி வரை விருப்ப மனு பெறப்படும் என்று திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் , 21சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்து இருப்பவர்களிடம் வரும் 9ஆம் தேதி திமுக தலைவர் மு .க. ஸ்டாலின் நேர்காணல் நடத்த இருப்பதாகவும் அன்பழகன் கூறியிருக்கிறார்.
ஜெயிக்கவே முடியாத தொகுதிகளை அதிமுக கொடுத்ததா.. அதுதான் தேமுதிகவுக்கு கோபமா.. என்ன நடக்கிறது?
இதேபோல, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடம் 10ஆம் தேதி நேர்காணல் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, திமுக சார்பில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவும், அரக்கோணம் தொகுதியில் போட்டியிட ஜெகத்ரட்சகனும் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர்.
அதேபோல் வடசென்னை தொகுதியில் போட்டியிட திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதியும், கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட பொன்முடியின் மகன் கவுதம சிகாமணியும் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர்.