2024 லோக்சபா தேர்தல்: அதிமுகவுடன் கூட்டணி-15-ல் தொடங்கி அந்த 10 தொகுதிகளை கறாராக கேட்க பாஜக முடிவு!
சென்னை: 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கான வியூகங்களில் தமிழக பாஜக படுதீவிரமாக இறங்கி உள்ளது. அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதில் உறுதியாக இருக்கும் பாஜக 15 தொகுதிகளில் தொடங்கி 10 தொகுதிகளைக் பெறுவதில் கண்டிப்பு காட்ட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சட்டசபை தேர்தலின் போது அதிமுகவுடனான கூட்டணியை பாஜக அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத தருணம்.. ஆனால் பாஜகவின் தமிழக பிரபலங்களுக்கான சில தொகுதிகளை தன்னிச்சையாக கையில் எடுத்துக் கொண்டு பிரசாரத்தை தொடங்கி அதிர்ச்சி தந்தது பாஜக.
இருந்தபோதும் அதிமுக பிடிவாதம் பிடித்ததால் சில தொகுதிகளை விட்டுக் கொடுத்தாக வேண்டிய கட்டாயம் பாஜகவுக்கு ஏற்பட்டது. இதனால் தொகுதிக்குள் இறங்கி வேலை செய்த அந்த பிரபலங்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
லோக்சபா தேர்தல் 2024-ம் ஆண்டுதான் என்றாலும் பாஜகவின் சில மூத்த தலைவர்கள் இப்போதும் அதே பாணியில் செயல்பட தொடங்கிவிட்டனர். தற்போதைய நிலையில் அதிமுக கூட்டணியில் 15 தொகுதிகளை எப்படியாவது வாங்கிவிடலாம்; அப்படி கிடைக்காத பட்சத்தில் 10 தொகுதிகள்தான் என்பதில் பாஜக உறுதியாக உள்ளதாம்.

அந்த 10 தொகுதிகள்
பாஜகவின் வாக்கு வங்கி கணிசமாக உள்ள தொகுதிகளாக அறியப்பட்டவை தென் சென்னை, கோவை, ராமநாதபுரம், வேலூர், சிவகங்கை, நெல்லை, நீலகிரி, கன்னியாகுமரி. இவை இல்லாமல் சில வட தமிழக தொகுதிகளை சேர்த்து கணக்குப் போட்டு வைத்திருக்கிறதாம் பாஜக. கட்சி மேலிடம் கட்டளையிட்டால் நெல்லை லோக்சபா தொகுதியில் போட்டியிடுவேன் என ஏற்கனவே நயினார் நாகேந்திரன் அறிவித்திருக்கிறார்.

நீலகிரியில் முருகன்?
அதேபோல் நீலகிரி தொகுதியைப் பொறுத்தவரை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் களமிறங்க சாத்தியங்கள் அதிகம் என்பதை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வெளிப்படுத்தி வருகின்றனர். அண்மையில் கூடலூரில் பாஜக பிரம்மாண்டமான மாஸ் கூட்டத்தை காட்டியிருந்தது. இது நீலகிரியில் எல்.முருகனை களமிறக்குவதற்கான முன்னோட்டம் எனவும் பார்க்கப்படுகிறது.

குமரி, கோவை
கன்னியாகுமரியைப் பொறுத்தவரையில் பாஜகவின் வாக்கு வங்கி அதிகம் உள்ள தொகுதி. இம்முறையும் மூத்த பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் களமிறங்க அதிக சாத்தியங்கள் உள்ளன என கூறப்படுகிறது. கோவையில் பாஜக மிக முக்கியமான தலைவர் அல்லது சிபி ராதாகிருஷ்ணன் போட்டியிட சாத்தியங்கள் உண்டு. இப்படி இப்போதே பாஜக தலைவர்கள் தொகுதியை கையில் எடுத்துக் கொண்டு அடிப்படை தேர்தல் வேலைகளில் பிஸி காட்டுகின்றனர்.

பாஜக பெரும் நம்பிக்கை
ஆனால் இத்தனை களேபரங்களையும் அதிமுகவின் ஒவ்வொரு கோஷ்டியும் உன்னிப்பாக கவனித்து கொண்டுதான் இருக்கிறது. என்னதான் அதிமுகவினர் ஆயிரம் கோஷ்டியினராக இருந்தாலும் தேர்தல் நேரத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுதான் ஆவார்கள் என்பதுதான் பாஜகவின் அசைக்க முடியாத நம்பிக்கை. அதனால்தான் இப்போதே மும்முரம் காட்டுகிறதாம் தமிழக பாஜக.












Click it and Unblock the Notifications