விஜயகாந்துக்கு எல்லாமுமாக இருந்த நம்பிக்கை நட்சத்திரம் கணேசன் மறைந்தார்! பிரேமலதா கண்ணீர் அஞ்சலி
சென்னை: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நீண்டகால நெருங்கிய உதவியாளராகப் பணியாற்றிய கணேசனின் மறைவு, கட்சித் தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜயகாந்தின் தனிப்பட்ட உதவியாளராகவும், நிர்வாக விவகாரங்களில் நம்பகமான ஆலோசகராகவும் அவர் பல காலம் செயல்பட்டார். அவரது பணி விஜயகாந்தின் திரைப்பட வாழ்க்கை முதல் அரசியல் பயணம் வரை பல கட்டங்களிலும் தொடர்ந்தது.

விஜயகாந்த் சினிமா நட்சத்திரமாக உச்சத்தில் இருந்தபோது, கணேசன் அவரது அன்றாட அலுவல்கள், படப்பிடிப்பு ஏற்பாடுகள், ரசிகர் சந்திப்புகள், அரசியல் கூட்டங்கள் என அனைத்திலும் முக்கியப் பங்காற்றினார்.
குறிப்பாக 2005-ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் தொடங்கப்பட்ட பின்னர், கட்சியின் அமைப்பு வளர்ச்சி மற்றும் தேர்தல் பணிகளில் அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக இருந்தது. விஜயகாந்தின் மக்கள் நாயகன் பிம்பத்தைப் பேணுவதற்கும், பொதுமக்களின் கோரிக்கைகள் விஜயகாந்தை வந்து அணுகுவதற்கும் அவர் ஒரு பாலமாகத் திகழ்ந்தார்.
இதனிடையே கணேசன் இன்று உயிரிழந்தார். இச்செய்தி அறிந்ததும், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து அஞ்சலி செலுத்தினார். அத்துடன், அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா, கணேசனின் மறைவு தேமுதிகவிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு எனத் தெரிவித்தார்.
"விஜயகாந்த் கணேசனுக்கு விசிறி விடும் வீடியோ காட்சிகளை நாம் பார்த்திருப்போம்; அவர் அந்த அளவுக்கு சிறந்த தொண்டாற்றக் கூடியவர்," என்று பிரேமலதா புகழாரம் சூட்டினார். "அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, இந்த துயரத்தில் நானும் பங்கெடுக்கிறேன்," என்றார்.
தேமுதிக இளைஞர் அணியில் கணேசன் மிகவும் சிறப்பாகப் பணியாற்றியவர் என்பதையும் அவர் நினைவுபடுத்தினார். பின்னர் தேமுதிக சார்பில் கணேசன் குடும்பத்தினருக்கு நிதியுதவியையும் அளித்தார்.
இதுகுறித்து பிரேமலதா விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தேசிய முற்போக்கு திராவிட , கழக முன்னாள் தொண்டர் அணி செயலாளரும், கழக தேர்தல் பணிக்குழு செயலாளருமான திரு.S.கணேசன் அவர்களின் மறைவிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தேன். உடன் கழக இளைஞர் அணி செயலாளர் திரு.வி.விஜயபிரபகர், கழக தலைமை நிலைய செயலாளர் திரு.ப.பார்த்தசாரதி,Ex.MLA., மற்றும் தலைமை கழக நிர்வாகிகள், கழக உயர்மட்ட குழு உறுப்பினர்கள், கழக அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், பகுதி, வட்ட கழக நிர்வாகிகள் அனைவரும் மறைந்த திரு.S.கணேசன் அவர்களுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். இவ்வாறு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications