டிச.,9ல் தொடங்க இருந்த லாரி வேலைநிறுத்தம் வாபஸ்.. அமைச்சர் சிவசங்கர் கொடுத்த உறுதியால் ஒத்திவைப்பு
சென்னை: வாகனங்களின் எப்சி கட்டண உயர்வை கண்டித்து தமிழகத்தில் டிசம்பர் 9 ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்தப்படும் என்று லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்தனர். இதனால் காய்கறி, கியாஸ் உள்பட பல்வேறு அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இந்நிலையில் தான் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கொடுத்த வாக்குறுதியால் இந்த வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகள் லாரிகளின் எப்.சி. (FC - Fitness Certificate) கட்டணத்தை சமீபத்தில் அதிரடியாக உயர்த்தியது. ரூ.850ல் இருந்த எப்சி கட்டணத்தை ரூ.33,040 ஆக உயர்த்தியுள்ளது. இதனால் லாரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஏற்கனவே டீசல் விலை உயர்வு, சுங்கக்கட்டண உயர்வு, உதிரி பாகங்களின் விலை உயர்வு உள்ளிட்டவற்றால் லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான், எப்சி கட்டண உயர்வை கண்டித்து டிசம்பர் 9ம் தேதி தமிழகம் முழுவதும் லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்து இருந்தனர்.
இந்நிலையில், தான் எப்சி கட்டண உயர்வை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று உறுதியளித்தார். இதையடுத்து தமிழகத்தில் லாரி உரிமையாளர்கள் தங்களின் காலவரையற்ற வேலைநிறுத்தத்ததை திரும்ப பெற்றுள்ளனர். மறுஅறிவிப்பு வரும் வரை வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் வழக்கம்போல் டிசம்பர் 9 ம் தேதி முதல் தமிழகத்தில் லாரிகள் ஓடும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications