லோயர் பர்த்.. அது விடுங்க, மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை கிடைக்குமா? கனிமொழியிடம் கேட்ட "இந்தியா"
சென்னை: ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகையை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவை உறுப்பினா் கனிமொழியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்கும், மூத்த குடிமக்களுக்கும், முன்பதிவு செய்வதில், ரயில்வேயில் சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.. குறிப்பாக, லோயர் பெர்த்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.. இதன்படி, ஸ்லீப்பர் வகுப்பில் 4 இருக்கைகள் ஒதுக்கப்படுகின்றன.

மூத்த குடிமக்கள்: மூத்த குடிமக்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில், ஸ்லீப்பர் வகுப்புகளில் 6 முதல் 7 லோயர் பெர்த்-களும், 3 டையர் ஏசி பெட்டிகளில் 4 முதல் 5 லோயர் பெர்த்-களும், 2 டையர் ஏசி பெட்டிகளில் 3 முதல் 4 லோயர் பெர்த்-களும் முன்பதிவில் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன.. இந்த வசதிகள் தற்போதுவரை பேருதவியாக இருந்து வருகின்றன.
ஆனால், ரயில்களில் பல ஆண்டுகளாகவே மூத்த குடிமக்களுக்கு பயண கட்டணத்தில் 50 சதவீதம் வரை சலுகை அளிக்கப்பட்டு வந்தது.. அதாவது, பெண்கள் மூத்த குடிமக்கள் பயணிகளுக்கு 50 சதவீத சலுகையும், வயதான ஆண் மற்றும் திருநங்கைகளுக்கு அனைத்து வகுப்புகளிலும் 40 சதவிகிதமும் கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டது.
சலுகையைப் பெறுவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு ஒரு பெண்ணுக்கு 58 வயதாகவும், ஆணுக்கு 60 வயதாகவும் இருந்து வந்தது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக, ரயில் சேவைகள் முடங்கின.. எனவே, வருவாய் இழப்பை சமாளிக்க மூத்த குடிமக்களுக்கான சலுகையை இந்திய ரயில்வே அப்போது ரத்து செய்தது.
சலுகைகள்: "மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை மீண்டும் வழங்கப்படுமா?" என்று கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, மத்திய ரயில்வே அமைச்சரான அஸ்வினி வைஷ்ணவ்விடம் கேள்வி எழுப்பப்பட்டது.. அதற்கு எந்தவிதமான பதிலையும் ரயில்வே அமைச்சர் சொல்லவில்லை.. அதற்கு பதில், "ஏற்கனவே ஒவ்வொரு ரயில் பயணிக்கும் கட்டணத்தில் 55 சதவீத சலுகையை வழங்கப்படுகிறது. சேரும் இடத்துக்கான டிக்கெட் ரூ.100 என்றால், ரயில்வே கட்டணம் ரூ.45 மட்டுமே. இதன் மூலம் ரூ.55 சலுகையாக அளிக்கப்படுகிறது" என்று கூறியிருந்தார்.
இப்படிப்பட்ட சூழலில், மூத்த குடிமக்களுக்கு பயண கட்டண சலுகை வழங்கப்பட வேண்டும் என்பது மீண்டும் கோரிக்கையாக எழுந்துவருகிறது.. இதுதொடா்பாக எம்பவா் இந்தியா நுகா்வோா் கல்வி, சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நடுவத்தின் கௌரவச் செயலா் ஆ. சங்கா் மனு ஒன்றினை அளித்துள்ளார்..
எம்பி கனிமொழி: எம்பி கனிமொழியிடம், "60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ரயில்களில் வழங்கப்பட்டு வந்த பயணக் கட்டணச் சலுகை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், அவா்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனா். மீண்டும் கட்டணச் சலுகை வழங்குவது தொடா்பாக மக்களவையில் நீங்கள் வலியுறுத்த வேண்டும்.
மேலும், மதுரை - பெங்களூா் வந்தே பாரத் ரயில் சேவையை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும். கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட தூத்துக்குடி - கோவை ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும். ஏற்கெனவே ரயில்வே வாரியத்தால் அறிவிக்கப்பட்ட தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் ரயில் சேவை, பாலருவி விரைவு ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிப்பது ஆகியவற்றையும் விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டனர்.
கோரிக்கை: இதனிடையே, தூத்துக்குடி - சென்னை இடையே "பகல் நேர ரயில்" இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனிமொழி எம்பியிடம் பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதேபோல, தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பியிடம் தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் நலச் சங்கத்தின் சார்பில் தலைவர் அ. கல்யாணசுந்தரம் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.
ரயில்கள் ரத்து: அந்த மனுவில் "தூத்துக்குடி மாநகரத்திலிருந்து கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு முன் தூத்துக்குடி - கோவை இரவு நேர லிங்க் எக்ஸ்பிரஸ் மற்றும் தூத்துக்குடி -சென்னை பகல் நேர லிங்க் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா காலத்திற்குப் பின் இந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டு விட்டது.
தாங்கள் சென்ற முறை பாராளுமன்றத்தில், திருநெல்வேலி - பாலக்காடு 'பாலருவி விரைவு ரயில் தூத்துக்குடி வரை நீடிக்க வேண்டும், தூத்துக்குடியில் இருந்து மதுரை-திருச்சி-தஞ்சை- கும்பகோணம் வழியாக சென்னைக்கு கூடுதல் இரவு நேர ரயில் இயக்க வேண்டும், தூத்துக்குடியில் இருந்து இரவு நேர ரயில் கோயம்புத்தூருக்கு தினசரி இயக்க வேண்டும், தூத்துக்குடியில் இருந்து மும்பைக்கு நேரடி ரயில் இயக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை பாராளுமன்றத்தில் இருமுறை பேசி உள்ளீர்கள்.
முயற்சிகள்: ரயில்வே அமைச்சரை, பலமுறை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்துள்ளீர்கள். மேற்படி கோரிக்கைகள் அனைத்தையும் தெற்கு ரயில்வே பொது மேலாளரை சந்தித்தும் தூத்துக்குடி மாநகர மக்களுக்காக முயற்சி செய்து உள்ளீர்கள்.
அதன் பலனாக, தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் வாரம் மூன்று முறை இரவு நேர ரயில், திருநெல்வேலி-பாலக்காடு "பாலருவி விரைவு ரயில்" தூத்துக்குடி வரை நீடிப்பு போன்ற கோரிக்கைகளுக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இருப்பினும், ரயில்வே நிர்வாகம் இந்த ரயில்களின் இயக்கம் குறித்து எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது.
கோரிக்கைகள் :
1) தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் வாரம் மூன்று முறை ரயில் மற்றும் திருநெல்வேலி - பாலக்காடு "பாலருவி ரயிலை" தூத்துக்குடி வரை நீட்டிப்பு ஆகியவை குறித்து டெல்லி ரயில்வே வாரியத்திடம் கோரிக்கை விடுத்து உடனடியாக இயக்க வலியுறுத்த வேண்டுகிறோம்.
2) தூத்துக்குடி - சென்னை முத்து நகர் ரயில் கோச்சுகளை வைத்து, தூத்துக்குடி - மதுரை - திருச்சி - தஞ்சாவூர் - கும்பகோணம் - மயிலாடுதுறை கடலூர்-விழுப்புரம் வழியாக சென்னைக்கு கூடுதல் ரயில் இருக்க வேண்டும்.
3) தூத்துக்குடி - சென்னை "பகல் நேர ரயில்" இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4) தூத்துக்குடி - மீளவிட்டான் - மேலமருதூர் - குளத்தூர் -விளாத்திகுளம் - நாகலாபுரம் புதூர் - அருப்புக்கோட்டை - காரியாபட்டி - ஆவியூர் - திருப்பரங்குன்றம் - மதுரை புதிய ரயில் பாதை திட்டத்திற்கு வருகின்ற மத்திய பட்ஜெட்டில் 500 முதல் 1000கோடி வரை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க மத்திய அரசையும் ரயில்வேத் துறையையும் வலியுறுத்த வேண்டுகிறோம்.
5) திருச்சி- காரைக்குடி, காரைக்குடி - விருதுநகர் ரயிலை தூத்துக்குடி வரை நீடிக்க வேண்டும்.
6) தூத்துக்குடி - சென்னை முத்து நகர் ரயிலை காலை 7:00 மணிக்குள் சென்னை எழும்பூர் சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
7) மதுரை- லோக்மான்ய திலக் ரயிலை தூத்துக்குடி வரை நீடிக்க வேண்டும்
இது குறித்து டெல்லி ரயில்வே வாரியத்திடம் உடனடியாக பேசி, நல்ல முடிவுகளை தூத்துக்குடி மாநகர பொது மக்களுக்கு பெற்றுத் தருமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறோம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications