Loyola: தமிழக சட்டசபை தேர்தலில் கனிமொழி போட்டியிட வேண்டுமா? லயோலா கணிப்பில் வாக்காளர்கள் சொன்னதை பாருங்க!
சென்னை: திமுக எம்பி கனிமொழியை மாநில அரசியலுக்கு திரும்புமாறு 53 சதவீதம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளதாக லயோலா முன்னாள் மாணவர்கள் கருத்துக் கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தல் குறித்த அறிவிப்பு இந்த வாரத்தில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு வேக வேகமாக தயாராகி வருகின்றன.

இதனிடையே பல்வேறு நிறுவனங்கள் கருத்துக் கணிப்புகளை நடத்தி, தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களின் ஐபிடிஎஸ் என்ற அமைப்பு தற்போது பல்வேறு கேள்விகளை வாக்காளர்களிடையே எழுப்பி கருத்துக் கணிப்புகளை நடத்தியுள்ளது.
அதாவது கிராமப்புறங்களில் யாருக்கு செல்வாக்கு, நகர்ப்புறங்களில் எந்த கட்சிக்கு வாக்கு சதவீதம் அதிகம், அடுத்த முதல்வர் யார், இளைஞர்களின் செல்வாக்கு எந்த தலைவருக்கு இருக்கிறது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது.
அந்த வகையில் கனிமொழி மாநில அரசியலுக்கு வர வேண்டும். இல்லை தேசிய அரசியலிலேயே இருக்கலாமா என்று கணிப்பு நடத்தப்பட்டது. அந்த கருத்துக் கணிப்பில் கனிமொழி மாநில அரசியலுக்கு வர வேண்டும் என 53 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே வேளை அவர் தேசிய அரசியலுக்கு தேவை என 35 சதவீதம் பேர் மட்டுமே சொல்லியிருக்கிறார்கள்.
அண்மைக்காலமாக கனிமொழி மாநில அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கோரி வருகிறார்கள். கனிமொழியின் பிறந்தநாள் கேக்கில் கூட தலைமைச் செயலகம் படம் பொரிக்கப்பட்டு அதில் ஸ்டாலின், கனிமொழி இருப்பது போன்று படம் இருந்தது.
மேலும் ஆங்காங்கே ஒட்டப்பட்ட போஸ்டர்களில் "புறம் காத்தது போதும், அகம் காக்க வா" என்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அது போல் திமுகவில் விருப்பமனு கொடுக்கும் போது கனிமொழி பெயரில் 30-க்கும் மேற்பட்டோர் விருப்பமனுக்களை கொடுத்துள்ளனராம்.
இந்த நிலையில் கனிமொழி நேற்றைய தினம் விளாத்திக்குளத்தில் கொல்லப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல சென்ற போது அவரிடம் செய்தியாளர்கள் மாநில அரசியலுக்கு வருகிறீர்களா என கேட்டதற்கு அவர் சிரித்தப்படியே தொண்டை சரியில்லை, அப்புறம் பேசுகிறேன் என சொல்லிவிட்டுச் சென்றார்.
அது போல் யார் முதல்வராக வேண்டும் என்பதை வரிசைப்படுத்த கூறிய கேள்விக்கு கூட ஸ்டாலின், விஜய், எடப்பாடி பழனிசாமி, சீமான் அல்லது கனிமொழி, உதயநிதி என வரிசைப்படுத்தியிருந்தனர். இதிலும் கூட ஸ்டாலினுக்கு அடுத்து கனிமொழியைத்தான் மக்கள் பெரிய ஆளுமையாக கருதுகிறார்கள் என்பதையும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
நகர்ப்புறங்களில் யாருக்கு ஆதரவு என்ற கேள்விக்கு திமுகவுக்கு என்று 24.77 சதவீதத்தினரும், தவெகவுக்கு என 23.46 சதவீதத்தினரும், அதிமுகவுக்கு என 20.55 சதவீதத்தினரும், நாதகவுக்கு என 6.7 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.
இதே வாக்கு வங்கி என்ற கணக்கில் பார்த்தால் தவெகவுக்கு 19.20 சதவீதமும், திமுகவுக்கு 17.7 சதவீதமும் அதிமுகவுக்கு 15.32 சதவீதமும் இருப்பதாக சொல்லப்படுகிறது.
எனவே யாருக்கு ஆதரவு என்பதில் முதல்வர் ஸ்டாலின் முதலிடத்திலும் வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் விஜய் முதலிடத்திலும் இருப்பதால் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு இருவருக்கு வாய்ப்பிருப்பதாக கருதப்படுவதாக தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications