உங்களுக்கு சிலிண்டர் டெலிவரி.. மெசேஜ் தொட்டா .. வங்கி கணக்கு மொத்தமும் காலி.. நூதன மோசடி - உஷார்
எல்பிஜி சிலிண்டர் டெலிவரியை பாதுகாப்பாக்கும் வகையில் மத்திய அரசின் கீழ் இயங்கும் எரிவாயு நிறுவனங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட டெலிவரி ஆதார குறியீடு (DAC) இப்போது சைபர் மோசடியாளர்களின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது.
சிலிண்டர் வீட்டுக்கு வந்ததும் உறுதிப்படுத்த டிஏசி கோடு அனுப்பப்படும். இந்த கோடை பயன்படுத்தி மோசடியாளர்கள் உண்மையான டெலிவரி செய்தி போல பாசாங்கு செய்து மக்களை ஏமாற்றி வங்கிக் கணக்குகளை காலி செய்கின்றனர்.
இந்த புதிய மோசடியால் பல சாதாரண குடும்பங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். இதனால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஹெச்பி கேஸ், இண்டேன் ஆகிய முக்கிய எல்பிஜி நிறுவனங்களும் பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளன.

மோசடியாளர்கள் எப்படி செயல்படுகின்றனர்?
சிலிண்டர் டெலிவரி செய்தி வந்ததாகக் காட்டி உடனடியாக டிஏசி கோடை கேட்கும் மெசேஜ் அல்லது அழைப்புகள் வருகின்றன. இந்த மெசேஜ் உண்மையானது போல தோன்றும். ஆனால் உண்மையான டெலிவரி நபர் வருவதற்கு முன்பே அல்லது சிலிண்டர் கிடைக்காத நிலையிலேயே இந்த கோட்-ஐ பகிர்ந்தால் வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடப்படும் அபாயம் உள்ளது.
இந்த மோசடி முறை மிகவும் எளிதாகவும், பலருக்கும் தெரியாத வகையிலும் நடைபெறுவதால், சாதாரண மக்கள் எளிதில் சிக்கிக் கொள்கின்றனர். எனவே ஒவ்வொரு மெசேஜையும் கவனமாக சரிபார்த்த பிறகே செயல்பட வேண்டும்.
குறிப்பாக சிலிண்டருக்கான தட்டுப்பாடு அதிகமாக இருக்கும் காரணத்தால் மக்கள் புக்கிங் செய்யப்பட்ட சிலிண்டர் மெசேஜ் வந்த உடனே அதை உடனே ஆர்வமாக பார்ப்பதும், லிங்க்-ஐ கிளிக் செய்வதும் என இயல்பாகிவிட்ட நிலையில், இதை பயன்படுத்தி பலர் மோசடி செய்து வருகின்றனர். இதேபோல் பலர் சிலிண்டர்களை கள்ள சந்தையில் விற்பதற்காகவும் OTP கேட்டு அழைப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக ஹெச்பி கேஸ், பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் ஆகியவை மெசேஜ் அனுப்பி வருகிறது.
எச்சரிக்கை விடுத்துள்ள ஹெச்பி கேஸ்
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மோசடியாளர்கள் எல்பிஜி டெலிவரி மெசேஜை அனுப்ப முயற்சிப்பதாக அது தெரிவித்தது. உண்மையான எச்பி கேஸ் மெசேஜ் எப்படி இருக்கும் என்பதை அறிந்திருந்தால் மட்டுமே பாதுகாப்பாக இருக்க முடியும்.
முதலில் மெசேஜ் வரும் அனுப்புநரின் பெயரை சரிபார்க்க வேண்டும். அது VM-HPGASc-S என்ற பெயரில் இருந்தால் மட்டுமே உண்மையானது. மெசேஜில் 4 இலக்க ஓடிபி இருக்க வேண்டும். இந்த கோடு சிலிண்டர் டெலிவரி நேரத்தில் மட்டுமே பயன்படுத்தப்படும். எச்பி கேஸ் பணியாளர்கள் ஒருபோதும் தொலைபேசி அழைப்பு, வாட்ஸ்அப் அல்லது சந்தேகத்திற்குரிய லிங்க் மூலம் ஓடிபி கேட்க மாட்டார்கள். மெசேஜ் அவசரமாகத் தெரிந்தாலோ, பழக்கமில்லாத வடிவத்தில் இருந்தாலோ நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.
பாரத் பெட்ரோலியத்தின் அறிவுரை:
பாரத் பெட்ரோலியம் நிறுவனமும் பொதுமக்களுக்கு தெளிவான வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. டிஏசி கோடு (ஓடிபி) என்பது சிலிண்டர் உங்களுக்கு வெற்றிகரமாக டெலிவரி செய்யப்பட்டதை உறுதிப்படுத்த உதவும் ஒரு பாஸ்வோர்டு போன்றது. பாதுகாப்புக்காக டெலிவரி நபரிடமிருந்து சிலிண்டர் கையில் கிடைத்த பிறகு மட்டுமே இந்த கோடை பகிர வேண்டும் என விளக்கியுள்ளது.
மோசடியிலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?
எல்பிஜி சிலிண்டர் தொடர்பான எந்த மெசேஜும் வந்தாலும் அவசரப்படாமல் சரிபார்க்க வேண்டும். உண்மையான டெலிவரி நபர் வந்த பிறகு மட்டுமே கோடை பகிர வேண்டும். சந்தேகம் இருந்தால் உடனே நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ எண்களை தொடர்பு கொள்ளலாம்.
இந்த எளிய எச்சரிக்கைகளை கடைபிடித்தால் பண இழப்பை தவிர்க்கலாம். பொதுமக்கள் இந்த தகவலை அனைவருக்கும் பகிர்ந்து எச்சரிக்கையாக இருங்க.














Click it and Unblock the Notifications