LPG சிலிண்டர் நுகர்வில் பெரும் சரிவு.. வெளியான முக்கிய டேட்டா..!
இந்தியாவில் சமையல் எரிவாயு (எல்பிஜி) நுகர்வு மார்ச் மாதத்தில் பெரும் சரிவை சந்தித்துள்ளது. மத்திய அரசு தரப்பில் எல்பிஜி விநியோகம் வழக்கம் போல் உள்ளது, புக்கிங் செய்யப்பட்டவர்கள் அனைவருக்கும் டெலிவரி செய்யப்பட்டு வருகிறது என தொடர்ந்து கூறப்பட்டு வரும் வேளையில், அரசின் அதிகாரப்பூர்வ தரவுகள் வேறு கதையைச் சொல்கின்றன.
மத்திய கிழக்கு போர் மற்றும் ஹார்முஸ் நீரிணைப் பிரச்சினை காரணமாக ஏற்பட்ட சப்ளை தடை, இந்திய வீடுகளின் சமையல் அறைகளை நேரடியாக பாதித்துள்ளது. அதை தாண்டி வர்த்தக அமைப்புகள் போதுமான சிலிண்டர் இல்லாமல் பெரும் நெருக்கடிக்கு உள்ளனது. இதனால் இந்தியாவில் பாதி ஹோட்டல்கள், டி-கடைகள், ஸ்னாக்ஸ் கடைகள், பேக்கரிகள், தொழிற்சாலைகள் என கமர்சியல் எல்பிஜி சிலிண்டர் தேவைப்படும் இடங்கள் முழுமையாக இயங்க முடியாமல் முடங்கியுள்ளது.

எல்பிஜி நுகர்வு
மத்திய அரசின் கீழ் இயங்கும் பெட்ரோலியம் பிளானிங் மற்றும் அனலிசிஸ் செல் (PPAC) வெளியிட்ட தரவுகளின்படி, மார்ச் மாதத்தில் எல்பிஜி நுகர்வு 2.379 மில்லியன் டன்னாக இருந்தது. இது கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்த 2.729 மில்லியன் டன்னுடன் ஒப்பிடும்போது 12.8 சதவீதம் கித்தட்ட 13% குறைவாகும்.
இந்தியா தனது எல்பிஜி தேவையில் 60 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. இந்த இறக்குமதியில் பெரும் பங்கு ஹார்முஸ் நீரிணை வழியாக வருவதால், அங்கு ஏற்பட்ட தடை நேரடி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கத்தார் நாட்டில் இருந்து பெரும் பகுதி எரிவாயு வருகிறது, ஈரான் தாக்குதல் காரணமாக கத்தார் நாட்டில் மொத்தமாக எரிவாயு சப்ளை முடக்கப்பட்டு உள்ளது.
வீட்டு உபயோகத்துக்கான எல்பிஜி சிலிண்டர் விற்பனை 8.1 சதவீதம் குறைந்து 2.219 மில்லியன் டன்னாக இருந்தது. ஆனால் வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள் மற்றும் தொழில்களுக்கு செல்லும் வணிக எல்பிஜி கிட்டத்தட்ட 48 சதவீதம் சரிந்தது. மொத்த விற்பனை (Bulk LPG) இன்னும் அதிகமாக 75.5 சதவீதம் குறைந்துள்ளது.
மத்திய அரசு வீட்டு உபயோகத்துக்கு எல்பிஜி சப்ளை இயல்பாக உள்ளது என்று கூறினாலும், உண்மையான நுகர்வின் அளவுகளை பார்க்கும் போது மக்களின் தேவைக்கு இணையாக அரசால் சப்ளை செய்ய முடியாத நிலை வெளிப்படையாக தெரிகிறது.
மேலும் எல்பிஜி என்பது அத்தியாவசியம் என்பதால் அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் விஷயம். இதனால் இதை யாரும் வாங்காமல் இருக்கமாட்டர்கள், அப்படியிருந்தும் வீட்டு உபயோகத்துக்கான எல்பிஜி சிலிண்டர் நுகர்வு 8.1 சதவீதம் குறைந்துள்ளது.
ஹார்முஸ் நீரிணை தடை
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களுக்குப் பிறகு ஈரான் எடுத்த நடவடிக்கைகள் காரணமாக ஹார்முஸ் நீரிணை வழி சரக்கு போக்குவரத்து தடைப்பட்டது. இதனால் சவுதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வரும் எல்பிஜி சப்ளை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், அரசு வீட்டு சமையல் எரிவாயுவை பாதுகாக்கும் வகையில் ஹோட்டல்கள் மற்றும் தொழில்களுக்கு செல்லும் எல்பிஜி சப்ளையை குறைத்துள்ளது.
எல்பிஜி வளர்ச்சியில் தடை
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் எல்பிஜி நுகர்வு நிலையான வளர்ச்சியை கண்டு வந்தது. மரம், கரி போன்ற மாசு உண்டாக்கும் எரிபொருட்களுக்கு பதிலாக மாசுப்பாட்டை குறைக்கும் வகையில் எல்பிஜியை ஊக்குவிக்கும் அரசின் திட்டங்கள் இதற்கு முக்கிய காரணமாக இருந்தன.
மேலும் நாட்டின் முக்கிய வளர்ச்சி காரணியில் பெட்ரோல், டீசல், எல்பிஜி நுகர்வு முக்கியமானதாக உள்ளது. இத்தகைய நிலையில் எரிபொருள் நுகர்வு குறைவது நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறையும் என்ற அச்சமும் உருவாகியுள்ளது.
போர் காரணமாக பல வளைகுடா நாடுகளில் வான்வழி மூடப்பட்டதால், விமான எரிபொருள் (ATF) நுகர்வு கிட்டத்தட்ட மாற்றமின்றி 807,000 டன்னாக இருந்தது. முழு நிதியாண்டில் ATF விற்பனை 2 சதவீதம் உயர்ந்து 9.161 மில்லியன் டன்னாக இருந்தது.
இக்காலக்கட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் நுகர்வு மட்டும் நல்ல வளர்ச்சியை காட்டியுள்ளது. பெட்ரோல் 7.6 சதவீதம் உயர்ந்து 3.78 மில்லியன் டன்னாகவும், டீசல் 8.1 சதவீதம் உயர்ந்து 8.727 மில்லியன் டன்னாகவும் இருந்தது. முழு நிதியாண்டில் பெட்ரோல் 6.5 சதவீதமும், டீசல் 3.6 சதவீதமும் அதிகரித்துள்ளது.
தொழில்துறைக்கு பயன்படும் நாப்தா 9.9 சதவீதம் குறைந்துள்ளது. சாலை அமைப்புக்கு பயன்படும் பிடுமின் (Bitumen) மட்டும் 3 சதவீதம் உயர்ந்து 8.84 மில்லியன் டன்னாக இருந்தது.












Click it and Unblock the Notifications