வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ 50 உயர்வு.. சென்னையில் சிலிண்டர் விலை எவ்வளவு?
சென்னை: கடந்த நான்கரை மாதங்களுக்கு பிறகு வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ 50 உயர்ந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் கவலையில் உள்ளனர்.
எரிவாயு சிலிண்டர் விலை, பெட்ரோல் டீசல் விலையை கச்சா எண்ணெயின் சந்தை விலைக்கேற்ப எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
அதன்படி சென்னையில் பெட்ரோல் டீசல் விலை நாள்தோறும் மாற்றியமைக்கப்படுகிறது. சென்னையில் எரிவாயு சிலிண்டரின் விலையை மாதந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வந்தன.

12 சிலிண்டர்கள்
12 சிலிண்டர்களை மானியத்துடன் அதன் பிறகு 13 ஆவதாக வாங்கும் சிலிண்டரை மானியமில்லாத விலையும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மானிய விலை பயனாளியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. ஆனால் பெரும்பாலானோருக்கு இந்த மானியத் தொகை கிடைக்கவில்லை என்ற புகார் எழுகிறது.

சென்னையில் எரிவாயு சிலிண்டர்
இந்த நிலையில் கடந்த மே மாதம் சென்னையில் ரூ 825 க்கு எரிவாயு சிலிண்டர் விற்பனை செய்யப்பட்டது. ஜூன் மாதத்தில் சிலிண்டர் விலையில் மாற்றமில்லை. அதன் பிறகு ஜூலை மாதம் ரூ 25.50 உயர்ந்து ரூ 850.50 க்கு விற்பனையானது. ஆகஸ்ட் மாதம் மீண்டும் ரூ 25 உயர்ந்து ரூ 875.50 க்கு விற்பனையானது.

சிலிண்டர் விலை உயர்வு
செப்டம்பர் மாதம் மீண்டும் ரூ 25 உயர்ந்து ரூ 900.50 க்கு விற்பனையாகி வந்தது. அது போல் அக்டோபர் மாதம் 17 ரூபாய் அதிகரித்து சிலிண்டர் விலை ரூ 917.50 க்கு விற்பனையானது. நவம்பர், டிசம்பர், ஜனவரி 2022, பிப்ரவரி மாதங்களில் சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் ரூ 917.50 க்கே விற்பனை செய்யப்பட்டு வந்தது.

நான்கரை மாதங்கள் உயராத சிலிண்டர் விலை
அதாவது சுமார் நான்கரை மாதங்களுக்கு மேலாக சிலிண்டர் எரிவாயு விலை உயராமல் இருந்தது. 5 மாநில தேர்தல்களால் விலை உயரவில்லை என்ற விமர்சனமும் எழுந்தது. 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி அதில் பாஜக 4 மாநிலங்களில் ஆட்சியை அமைத்தது. மேலும் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து வருவதால் எண்ணெய் பொருட்களின் விலை உயர்ந்தும் சிலிண்டர் விலை உயராமல் இருந்தது.

சிலிண்டர் விலை உயர்வு
இந்த நிலையில் சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ 50 அதிகரித்துள்ளது. அதாவது சிலிண்டரின் ரூ 967.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது மட்டுமல்லாமல் நான்கரை மாதங்களுக்கு பிறகு பெட்ரோல் டீசல் விலையும் உயர்ந்துவிட்டது. ஏற்கெனவே கொரோனாவால் வாழ்வாதாரங்கள் கேள்விக்குறியாகியுள்ள நிலையில் இந்த விலையேற்றம் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.











Click it and Unblock the Notifications