வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிரடியாக உயர்வு.. மாதத்தின் முதல் நாளிலேயே ஷாக்.. ரேட் என்ன?
சென்னை: வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.48 உயர்த்தப்பட்டுள்ளது. அதே வேளையில் வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இதனால் இல்லத்தரசிகள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
சர்வதேச கச்சா எண்ணெயின் விலை நிர்ணயத்திற்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அதே போல சிலிண்டர் விலையும் எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து வருகின்றன. மாதம் தோறும் சிலிண்டர் விலை சர்வதேச சந்தை அடிப்படையில் மாற்றியமைக்கப்படுகிறது. அந்த வகையில் அக்டோபர் 1 ஆம் தேதியான இன்று சிலிண்டர் விலை பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, வணிக சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.48 உயர்ந்துள்ளது. இதன்படி, ரூ.1855க்கு விற்கப்பட்டு வந்த சிலிண்டர் விலை ரூ.1903 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளையில் வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்ந்து இருப்பதால் ஹோட்டல், டீக்கடை உள்ளிட்ட வணிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
முன்னதாக கடந்த மாதமும் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை இன்றைய தினம் ரூ 38 உயர்ந்தது. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை தொடர்ந்து வருவது உணவு பொருட்களின் விலை உயரும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தற்போது சரிவில் உள்ளது. இதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு கணிசமான வருவாய் கிடைத்துள்ளது.
தொடர்ந்து விலை சரிந்து வருவதால் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படலாம் என்ற ஒரு பேச்சும் மத்திய அரசு வட்டாரங்களில் அடிபட்டது. ஆனால், பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றம் செய்யப்படாமலே உள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 198 வது நாளாக மாற்றமின்றி அதே விலையில் நீடிக்கிறது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100.75ம், டீசல் விலை ரூ.92.34 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றிற்கு 90 டாலர் முதல் 70 டாலர் வரை உள்ளது. தொடர்ந்து விலையில் ஏற்றம் இறக்கம் இருப்பதால் தற்போதைக்கு பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்வது சரியாக இருக்காது என மத்திய எண்ணெய் அமைச்சகம் கருதுவதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications