பிரபாகரன் உயிருடன் இல்லை- குழப்புகிறார் பழ.நெடுமாறன் - "தமிழீழ விடுதலைப் புலிகள்" கண்டனம்!
பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் குழப்புகிறார் என தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாக உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் அறிவித்துள்ளதற்கு அந்த இயக்கத்தின் பெயரில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பழ.நெடுமாறன் கூறியிருந்ததாவது: சர்வதேசச் சூழலும் இலங்கையில் ராஜபக்சே ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்து கிளம்பி இருக்கிற சிங்கள மக்களின் போராட்டங்களும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கி உள்ளது.இந்தச் சூழலில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன், நலமுடன் இருக்கிறார் என்கிற நற்செய்தியை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு உறுதியாகத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். இதுவரை அவரைப் பற்றி திட்டமிட்டுப் பரப்பப்பட்ட யூகங்களுக்கும் ஐயங்களுக்கும் இது முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறோம். தமிழீழ மக்களின் விடியலுக்கானத் திட்டத்தை அவர் விரைவில் அறிவிக்க இருக்கிறார். தமிழீழ மக்களும் உலகத் தமிழர்களும் ஒன்றுபட்டு நின்று அவருக்கு முழுமையான ஆதரவினை அளிக்க முன்வருமாறு வேண்டுகிறோம்.

விடுதலைப் புலிகள் வலிமையாக இருந்த காலம் வரை இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதையும் தங்கள் மண்ணில் காலூன்ற அனுமதிக்கவில்லை. இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதனுடனும் எந்த கால கட்டத்திலும் எத்தகைய உதவியும் பெறுவதில்லை என்பதில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் மிக உறுதியாக இருந்தார். தற்போது இலங்கையில் ஆழமாக காலூன்றி இந்திய எதிர்ப்புத் தளமாக அதை ஆக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளதையும் இந்துமாக்கடலின் ஆதிக்கம் சீனாவின் பிடியில் சிக்கும் அபாயம் இருப்பதையும் எண்ணிப் பார்த்து அதைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்திய அரசை வேண்டுகிறோம். இந்த முக்கியமான கால கட்டத்தில் தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் தமிழ்நாட்டு மக்களும் ஒன்றுபட்டு தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு துணை நிற்குமாறு வேண்டுக் கொள்கிறோம். இவ்வாறு பழ.நெடுமாறன் தெரிவித்திருந்தார்.
தற்போது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தயா மோகன் என்ற பெயரில் ஒரு அறிக்கை ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் 13 ஆண்டுகளுக்கு முன்னரே பிரபாகரன் இறந்துவிட்டதை விடுதலைப் புலிகள் இயக்கம் உறுதி செய்துவிட்டது. தற்போது பழ.நெடுமாறன் தேவை இல்லாத குழப்பத்தை ஏற்படுத்துகிறார். பழ.நெடுமாறனின் இந்த பேட்டி, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் நீட்டிக்கவே செய்யும் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும் பிபிசி ஊடகத்துக்கு தயா மோகன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: இது மக்களை குழப்புவதற்கான அறிவிப்பு. சமீபத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது சில நாடுகள் விதித்திருக்கின்றன. தடையை நீட்டிப்பதற்கான முன் முயற்சியாகத்தான் இதை நான் பார்க்கிறேன். 13 ஆண்டுகளுக்கு முன்பாக, பிபிசியின் மூலமாக பிரபாகரன் இறந்ததை நாங்கள் உறுதிசெய்தோம். பிரபாகரன் இருப்பதாக இப்போது ஊடகங்களுக்கு தகவல் கொடுக்கும் இவர்கள்தான் அப்போதும் அவரது வீர மரணம் குறித்து அறிவிப்பதை தடுத்தார்கள். இப்போது இதை சொல்வதற்கான தேவை என்ன? அவர் மே 17ஆம் தேதி இறந்துவிட்டார் என்ற நிலையில், அதைக் கையாள்வது குறித்து தாயகத்தில் வேறு வேறு இடங்களில் இருந்த பொறுப்பாளர்கள், தளபதிகள், போராளிகள், வெளிநாடுகளில் இருந்த போராளிகள், பொறுப்பாளர்கள் ஆகியோர் விவாதித்தோம். அதில் ஒரு பகுதியினர் வீர மரணத்தை அறிவிக்க வேண்டும் என்றார்கள். ஒரு பகுதியினர் அறிவிக்க வேண்டாம் என்றார்கள். இப்போது காசி ஆனந்தனுக்கும் பழ. நெடுமாறனுக்கும் பின்னால் இருந்து செயல்படுபவர்கள், முதலில் அறிவிக்க ஒப்புக்கொண்டார்கள். பிறகு, அடுத்த நாள் தலைவர் இருக்கிறார். இதை அறிவிக்க வேண்டாம் என்றார்கள். நாங்கள் போர்க்களத்தில் இருந்தோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணி நேரமும் தொடர்பில் இருந்தோம். எங்களுக்குத் தெரியாத செய்தி, இந்தியாவில் இருந்த இவர்களுக்கு எப்படித் தெரியுமெனத் தெரியவில்லை. பிறகு நான் பிபிசி மூலம் அந்தச் செய்தியை அறிவித்தேன். இப்போது அவர்கள் செய்வது மக்களைக் குழப்பும். எதிரியைத் தூண்டிவிடும். இவ்வாறு தயா மோகன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications