உ.பி.யில் கால் பதித்த லுலு மால்! 2500 கோடி முதலீடு! செங்கல்லை கூட நட முடியாதுனு அண்ணாமலை சொன்னாரே..?
சென்னை : உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஏற்கனவே 2000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ள லுலு ஷாப்பிங் மால் நிறுவனம், மேலும் 2500 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் ஒரு செங்கல்லை கூட லுலு நிறுவனம் நட முடியாது என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த நில நாட்களுக்கு முன்னதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மூன்று நாள் பயணமாக துபாய் சென்றபோது அங்கு, தமிழகத்துக்கு முதலீடுகளை கொண்டு வருவதற்காக பல்வேறு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

லுலு மால்கள்
அப்போது மால்கள் துறையில் கொடிகட்டி பறக்கும் லுலு நிறுவனம் தமிழகத்தில் 3500 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் கையெழுத்தானது. உலக அளவில் முன்னணி தொழில் நிறுவனங்களில் ஒன்றான லுலு மார்ட்டின் உரிமையாளர் யூசூப் அலியும் இந்த ஒப்பந்தம் கையெழுத்தான போது உடனிருந்தார்.

உபியில் முதலீடு
பாஜக ஆளும் மாநிலங்களிலேயே லுலு மார்ட் நிறுவனம் துவங்க பச்சைக் கம்பளம் விரித்து வரவேற்பு தெரிவித்து வரும் நிலையில் பல மாநிலங்களில் அந்நிறுவனம் முதலீடு செய்துள்ளது. குறிப்பாக பாஜக ஆளும் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் லுலு மாலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெறு வரும் நிலையில், யோகி ஆதித்யநாத் தான் இந்த மால் கொண்டுவர முழுமுயற்சி செய்து அடிக்கலுக்கும் காரணமாக இருந்தார்.

2500 கோடி
பிரதமர் நரேந்திர மோடியே, வாரணாசியில் லுலு மால் வேண்டும் என கேட்டிருக்கிறார். அதற்கான வரைபடத்தயாரிப்பும் நடந்துவருகிறது. ஏற்கனவே லுலு மால் நிறுவனம் சுமார் 2,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஷாப்பிங் மால் விரைவில் உத்தரபிரதேச மாநிலத்தில் திறக்கப்படும் நிலையில் அங்கு மேலும் 2500 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் வாரணாசி மற்றும் பிரயாக்ராஜ் பகுதிகளில் ஷாப்பிங் மால்கள் மற்றும் நொய்டாவில் உணவு பூங்கா அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அண்ணாமலை கருத்து
இது மட்டுமல்லாது பாஜக ஆளும் பல மாநிலங்களில் மால்கள் திறக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜக தமிழக தலைவரான அண்ணாமலை கூறிய கருத்து சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பேசிய அண்ணாமலை," தமிழகத்தில் லுலு மார்ட் ஒரு செங்கலை வைப்பதற்கு கூட பாஜக அனுமதி கொடுக்காது. நாங்கள் எந்த நிறுவனத்திற்கும் எதிரான கட்சி கிடையாது. ஆனால் லுலு நிறுவனத்தால் சிறு வணிகர்கள் காணாமல் சென்று விடுவர். லுலு நிறுவனம் கோலோச்சிக் கொண்டிருக்கின்ற துபாயில் கூட அந்த நிறுவனம் வேண்டாமென்று கூறிக்கொண்டு இருக்கின்றனர்." என பேசியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications