சிறையில் சொகுசு வசதி... தொடரும் வழக்கு.. பெங்களூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான சசிகலா
சிறையில் சொகுசு வசதிக்காக லஞ்சம் கொடுத்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சசிகலா, இளவரசி இருவரும் பெங்களூரு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியுள்ளனர்.
சென்னை: பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்த போது சசிகலா, இளவரசிக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்க வேண்டி அங்கிருந்த அதிகாரிகளுக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்த புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சசிகலாவும் இளவரசியும் இன்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர். விமானம் மூலம் சென்னையில் இருந்து பெங்களூருக்கு சென்றுள்ளனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு கால தண்டனை அனுபவித்து விடுதலையானாலும் வழக்குகள் விடாமல் விரட்டி வருகிறது சசிகலாவை . வழக்குகளில் இருந்து தப்பிக்க கோவில் கோவிலாக சென்று யாகம் நடத்தி வருகிறார் சசிகலா. இன்னொரு முறை சிறைக்குப் போகும் தெம்பும் தைரியமும் சசிகலாவிற்கு இல்லை என்று கூறுகின்றனர் அவரது உறவினர்கள்.
சிறையில் இருந்த போது சொகுசு வாழ்க்கைக்காக ஆசைப்பட்டு லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகார் ஒன்று காலை சுற்றிய பாம்பாக சசிகலாவை சுற்றிக்கொண்டிருக்கிறது. சசிகலா சிறையில் இருந்த போது ஷாப்பிங் சென்ற வீடியோவும் அப்போது சமூக வலைத்தளங்களில் வலம் வந்தது.
ஜெ.மனநிலையில் வலம் வரும் சசிகலா... சரிசமமாக அமர்ந்த ஓபிஎஸ் தம்பி - திருச்செந்தூரில் நடந்தது என்ன
பரப்பன அக்ரஹாரா சிறை
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் கடந்த 2017ஆம் ஆண்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். சிறைவாசம் அனுபவித்தபோது சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்க பரப்பனஅக்ரஹாரா சிறை அதிகாரிகள் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
பெங்களூரு ஊழல் தடுப்பு படை போலீஸ்
இதுகுறித்து பெங்களூரு ஊழல் தடுப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் விசாரணையை நடத்தாமலும், குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யாமலும் போலீசார் தாமதம் செய்து வருவதால், இவ்வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி சென்னையை சேர்ந்த கீதா என்பவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
பெங்களூரு சிறப்பு நீதிமன்றம்
இதில் கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவுப்படி கடந்த ஜனவரி மாதம் 7ஆம் தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஊழல் தடுப்பு படை போலீசார், ரூ.2 கோடி லஞ்ச வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தனர். பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளராக இருந்த சோமசேகர், டாக்டர் அனிதா, அதிகாரிகள் சுரேஷ், கஜராஜ் மாகனூர் ஆகிய 4 பேர் மீது விசாரணை நடத்த அரசு அனுமதி வழங்கியது.
சசிகலாவிற்கு சம்மன்
இந்த நிலையில், ரூ.2 கோடி லஞ்ச வழக்கில் குற்றவாளிகளாக சோமசேகர், டாக்டர் அனிதா, அதிகாரிகள் சுரேஷ், கஜராஜ் மாகனூர், சசிகலா, இளவரசி உள்பட 7 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். 24வது பெங்களூரு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மார்ச் 11ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சசிகலா, இளவரசி, கிருஷ்ணகுமார், அனிதா, கஜராஜ மகனுார் ஆகிய ஐந்து பேருக்கும் சம்மனை அனுப்ப பிப்ரவரி 11ம்தேதி நீதிபதி லட்சுமிநாராயணன் உத்தரவிட்டுள்ளார்.
தப்புவாரா சசிகலா
ஓராண்டுகளுக்கு மேல் ஓய்வெடுத்து ஆன்மீக பயணம் சென்று வந்த சசிகலா மீண்டும் வழக்குக்காக நீதிமன்றபடியேறியுள்ளார். நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக இன்று காலை சசிகலா, இளவரசி இருவரும் சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூருக்கு சென்றனர். இந்த வழக்கில் இருந்து தப்புவாரா? அல்லது மீண்டும் சிறை செல்வாரா என்பது விசாரணைகளுக்குப் பிறகு தெரிய வரும்.