பழி என் மீதே வருகிறது என்ன செய்ய? ’அது’ முற்றிலும் உண்மைக்கு புறம்பானது! உடைத்துப் பேசிய வைரமுத்து
சென்னை: தமிழ் திரையுலகில் பல ஆண்டுகளாக கவிப்பேரரசு என கொண்டாடப்படுபவர் வைரமுத்து. திரைப்பட பாடல் ஆசிரியர் மட்டுமல்லாது நாவலாசிரியர் உள்ளிட்ட பல முகங்களை கொண்டவர். தமிழ் சினிமாவில் கடந்த சில தினங்களாக வைரமுத்துவின் பாடல் வரிகளை கேட்க முடியவில்லை. இந்த நிலையில் என் மீதே பழி வருகிறது என பதிவு ஒன்றை எக்ஸலத்தில் பகிர்ந்திருக்கிறார் வைரமுத்து.
கவிஞர் கண்ணதாசன், கவிஞர் வாலிக்கு அடுத்தபடியாக தமிழ் திரையுலகில் பெரும்பாலான ரசிகர்களால் கவிப்பேரரசு என கொண்டாடப்படுபவர் கவிஞர் வைரமுத்து. சினிமா தாண்டி இலக்கிய உலகிலும் தனி இடத்தைப் பெற்றுள்ள அவரது கவிதைத் தொகுப்புகளும் நாவல்களும் ஏராளம்.
இதுவரை 7500 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ள அவர், சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை 7 முறை பெற்றுள்ளார். திரைப்பட பாடல்கள் மட்டுமல்லாது நாவல்கள், கவிதைத் தொகுப்புகள் என இப்போது இலக்கிய உலகில் தீவிரமாக இயங்கி வருகிறார்.

எக்ஸ் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது சமூகக் கருத்துக்களையும் அரசியல் சார்ந்த நிகழ்வுகளையும், விமர்சனங்களையும் முன்வைத்து வருகிறார். மேலும் சினிமா உலகில் தான் எதிர்கொண்ட விஷயங்கள் குறித்தும் வைரமுத்து பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பாடல் வரிகளில் திருத்தம் கேட்டால் செய்ய செய்ய மாட்டார் வைரமுத்து என்ற குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளித்திருக்கிறார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," என்மீது ஒரு பழி உண்டு பாடல்களில் திருத்தம் கேட்டால் செய்ய மாட்டேன் என்று அது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. திருத்தத்திற்கு ஒரு கருத்தமைதி வேண்டும். இருந்தால், அதற்கு நான் உடனே உடன்படுவேன்; மாற்றியும் கொடுப்பேன்; கொடுத்திருக்கிறேன்
புன்னைகை மன்னன் படத்தில் 'வான் மேகம் பூப்பூவாய்த் தூவும்' என்றொரு பாட்டு. மழையில் நனையும்
ஒரு மான்குட்டி தன் கவிதையால் மழையைக் குளிப்பாட்டும் பாட்டு.
'மழைத்துளி தெறித்தது எனக்குள்ளே குளித்தது நினைத்தது பலித்தது உயிர்த்தலம் சிலிர்த்தது' என்று எழுதியிருந்தேன். 'உயிர்த்தலம் என்பதை மட்டும் மாற்றிக்கொடுங்கள்' என்றார். இசையமைப்பாளர்
ஏன் என்றேன்? 'நீங்கள் எழுதிய பொருளில் புரிந்து கொள்ளாமல் அதைப் பெண்ணுறுப்போடு
சம்பந்தப்படுத்திப் பிரச்சினை செய்வார்கள்' என்றார். சிந்தித்த போது சரியென்றே பட்டது. நான் உடனே 'நினைத்தது பலித்தது குடைக்கம்பி துளிர்த்தது' என்று மாற்றிக் கொடுத்தேன். இதில் நியாயம் இருக்கிறது
இன்னொரு படம் மனிதன். அதில் 'வானத்தைப் பார்த்தேன் பூமியைப் பார்த்தேன்' என்றொரு பாடல்.
"குரங்கிலிருந்து பிறந்தானா குரங்கை மனிதன் பெற்றானா யாரைக் கேள்வி கேட்பது டார்வின் இல்லையே" என்று எழுதியிருந்தேன். இயக்குநர் எஸ்.பி.முத்துராமனின் உதவியாளர் லட்சுமி நாராயணன் என் காதோடு வந்து 'டார்வின் என்பதை மட்டும் மாற்றுங்கள்; அது எல்லாருக்கும் புரியாது' என்றார்
நான் புன்னகையோடு சொன்னேன்: 'தெரிந்ததை மட்டும் சொல்வதல்ல பாட்டு; தெரியாததைச் சொல்லிக்
கொடுப்பதும் பாட்டு' என்று மாற்ற மறுத்துவிட்டேன். எஸ்.பி.முத்துராமனிடம் சென்று நான் சொன்னதைச்
சொல்லியிருக்கிறார். அவரும் இதற்குமேல் வற்புறுத்த வேண்டாம் என்று வருத்தத்தோடு விட்டுவிட்டார். டார்வின் பேசப்பட்டது. இப்படி நியாயமான பொழுதுகளில் மாற்ற மறுத்திருக்கிறேன். பாட்டுவரியின் திருத்தத்தைப் பொருளமைதியே தீர்மானிக்கிறது; நானல்ல. ஆனால் பழி என்மீதே வருகிறது என்ன செய்ய?" என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications