மு.க.ஸ்டாலின் முதல்வராக முடியாது; எனது ஆதரவாளர்கள் முதல்வராக்க விடமாட்டார்கள்: மு.க. அழகிரி ஆவேசம்
சென்னை: மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக ஒருபோதும் ஆக முடியாது; என்னுடைய ஆதரவாளர்கள் மு.க.ஸ்டாலினை முதல்வராக்கவும் விடமாட்டார்கள் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி ஆவேசமாக கூறினார்.
Recommended Video
கடந்த 2014-ஆம் ஆண்டு கருணாநிதிக்கும் மு.க. அழகிரிக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு அவரை கட்சியிலிருந்து கருணாநிதி நீக்கிவிட்டார். அவரை மீண்டும் கட்சியில் சேர்க்க தயாளு அம்மாள், கனிமொழி உள்ளிட்ட சமரசம் செய்ய முயற்சித்தும் பலனளிக்கவில்லை.
கருணாநிதி இறந்தவுடன் திமுகவில் இணைய அழகிரி திட்டமிட்டிருந்தார். ஆனால் அந்த முயற்சி கைகூடவில்லை. இந்த நிலையில் ரஜினிகாந்த் தொடங்கும் கட்சியில் அழகிரி இணைவார் அல்லது தனிக்கட்சி தொடங்கி கூட்டணி வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
மதுரையில் ஆலோசனை
ஆனால் ரஜினியுடன் படத்தில் வேண்டுமானால் நடிப்பேன், கட்சியில் இணைய மாட்டேன் என்றார் அழகிரி. இதையடுத்து அவர் தனது ஆதரவாளர்களுடன் இன்றைய தினம் ஆலோசனை நடத்துவார் என அறிவிக்கப்பட்டது.
சமூக இடைவெளியுடன் ஆலோசனை
மதுரை பாண்டிகோவில் அருகே துவாரகா பேலசில் இன்று மாலை 4 மணியளவில் ஆலோசனை கூட்டத்தை அழகிரி நடத்தினார். இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதுமிலிருந்து ஆதரவாளர்கள் பங்கேற்றனர். கொரோனா காலம் என்பதால் சமூக இடைவெளியுடன் கூட்டம் நடைபெற்றது.
திமுக கோட்டை மதுரை
இதில் பேசிய மு.க. அழகிரி, சதிகாரர்கள், துரோகிகளை எதிர்க்கின்ற முதல் படிக்கட்டுதான் ஆலோசனை கூட்டம். எம்ஜிஆரின் கோட்டையாக இருந்த மதுரையை திமுகவின் கோட்டை என மாற்றினேன். மத்திய அமைச்சர் பதவியை வேண்டாம் என்ற போது கருணாநிதி வற்புறுத்தி கொடுத்தார்.
ஸ்டாலினை முதல்வராக்க விடமாட்டோம்
ஸ்டாலினுக்கு பொருளாளர் பதவியை வாங்கிக் கொடுத்ததே நான்தான். ஸ்டாலினுக்கு பொருளாளர் பதவி கொடுக்கப்படுவதால் மத்திய அமைச்சர் பதவிக்கு சரி என்றே. ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி தருவதாக கருணாநிதி கூறினார். அதற்கும் சரி என்றேன். ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக ஒருபோதும் ஆக முடியாது; என்னுடைய ஆதரவாளர்கள் ஸ்டாலினை முதல்வராக்கவும் விடமாட்டார்கள் என்றார்.