எங்களுக்கெல்லாம் ரொம்ப டிமாண்ட் இருக்கு.. மு.க.ஸ்டாலின் கலகல பேச்சு
சுயமரியாதை திருமணங்களை நடத்தி வைக்க டிமாண்டு உள்ளதாக ஸ்டாலின் கூறினார்.
சென்னை: சுயமரியாதை திருமணங்களை நடத்தி வைக்க எங்களை போன்றவர்களுக்கு ரொம்ப டிமாண்ட் என்று மு.க.ஸ்டாலின் நகைச்சுவையுடன் கூறியுள்ளார்.
சென்னை கலைஞர் அரங்கத்தில் திமுக பிரமுகர் இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்த விழாவில் தலைமையேற்று பேசிய மு.க.ஸ்டாலின் சொன்னதாவது:
"வைதீக திருமணங்களை நடத்தி வைக்க புரோகிதர்களுக்கு எல்லாம் டிமாண்ட் எப்படி அதிகமாக இருக்குமோ அதுபோல இதுபோன்ற சுயமரியாதை திருமணங்களை நடத்தி வைக்க எங்களை போன்றவர்களுக்கு அதிக டிமாண்ட்.

தமிழக மக்கள்
உடனே, வைதீக திருமணங்கள் பற்றி ஸ்டாலின் இப்படி எல்லாம் பேசி விட்டாரே என்று சிலர் நாளைக்கே வாட்ஸ் அப்பில் சித்தரித்து, ஜோடித்து அனுப்ப அனுப்ப ஆரம்பித்து விடுவார்கள். நான் அதை பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டேன். தமிழக மக்களை நம்பி இதுவரை அரசியல் நடத்தி வந்துள்ளோம். இனியும் அப்படித்தான் நடத்துவோம்.

ஜெயலலிதா
முதல் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்திய ஜெயலலிதா, நம் மாநிலத்திற்கு பல தொழிற்சாலைகள் வரப்போகிறது, பல இளைஞர்களுக்கு வேலை கிடைக்கப்போகிறது என்றெல்லாம் சொன்னார். ஆனால் எதுவும் நடக்கவில்லை.

கோட்டு - சூட்டு
அவரைபோலவே, அதிகமாக செலவு, வீண் விளம்பரம் செய்து 2-வது மாநாட்டை எடப்பாடி பழனிசாமி நடத்தினார். ரோட்டில் சுற்றித் திரிந்தவர்களுக்கு எல்லாம் கோட் சூட் போட்டு கட்டாயப்படுத்தி வரவழைத்தார். வங்கிகளில் கடன் வாங்கி நோட்டீஸ் பெற்ற கம்பெனிகளின் முதலாளிகளும் இந்த மாநாட்டுக்கு வந்து போனார்கள்.

குட்டிச்சுவராக்குகின்றன
அதற்கான எல்லா ஆதாரமும் என்கிட்ட இருக்கு. சட்டப்பேரவையைக் கூட்டட்டும், ஆதாரத்தோடு அப்போ நான் சொல்கிறேன்.தமிழகத்தில் அந்திய முதலீடு 21% சரிந்துள்ளது. மக்களை ஏமாற்றி நாட்டை குட்டிச் சுவாராக்கி வருகிறது மத்திய அரசும், மாநில அரசும்" என்றார்.

அம்மா நாளிதழ்
இந்து மத வைதீக திருமணம் குறித்து மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கள் கடந்த 2 நாளாக சர்ச்சையை ஏற்படுத்தி வருவதுடன், பாஜக உள்ளிட்ட 'நமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழும்' கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications