ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம்
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக -பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். தவெக, நாம் தமிழர் கட்சியும் களத்தில் சுழன்று கொண்டிருக்கிறார்கள். பிரம்மாண்ட கூட்டணியுடன் களத்தில் திமுக முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்கூட்டியே பிரச்சாரத்தை தொடங்கவுள்ளார். ஏப்ரல் 2 ஆம் தேதிக்கு பதிலாக மார்ச் 31 ஆம் தேதியே திருவாரூரில் இருந்து ஸ்டாலின் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளாராம்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் சென்னை மயிலாப்பூரில் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார். தவெக தலைவர் விஜய் நாளை முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்டாலின் பிரச்சாரம்
திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் வருகிற ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் பிரச்சாரத்தை தொடங்குவதாக இருந்தது. திருவாரூரில் ஸ்டாலின் பிரச்சாரம் தொடங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது. அனைத்து களமும் மாறுவதால் ஸ்டாலின் முன்கூட்டியே பிரச்சாரத்தை தொடங்க இருக்கிறார். அதன்படி மார்ச் 31 ஆம் தேதியே (செவ்வாய்க்கிழமை) ஸ்டாலின் பிரச்சாரம் தொடங்கவுள்ளாராம்.
அன்றைய தினம் மாலை திருவாரூர் மாவட்டம், தெற்கு வீதியில் திமுக பிரச்சார பொதுக் கூட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொள்ள இருக்கிறாராம். திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து பிரச்சாரம் செய்ய இருக்கிறாராம். திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைபூண்டி, நன்னிலம், நாகப்பட்டினம், வேதாராண்யம், கீழ்வேளூர் உள்ளிட்ட 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்ய இருக்கிறாராம்.
திடீர் மாற்றம்
முதல் பிரச்சார கூட்டத்திலேயே பல்வேறு முக்கிய விஷயங்களை பேசி கவனம் ஈர்ப்பதற்கு ஸ்டாலின் திட்டமிட்டுள்ளாராம். எதிர்க்கட்சிகள் அனைவரும் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டதால் ஸ்டாலினின் திட்டமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அவர் அடுத்தடுத்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தேதிகளிலும் மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications