அப்போ எல்லாமே அரசியல்தான் போல.. விஜயகாந்த் சந்திப்பு பற்றி பிரேமலதா சொன்ன உண்மை!
திமுக தலைவர் ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து உடல்நலம் குறித்து மட்டும் விசாரிக்கவில்லை அரசியலும் பேசினார் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து உடல்நலம் குறித்து மட்டும் விசாரிக்கவில்லை அரசியலும் பேசினார் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் தேமுதிக தமிழகத்தில் யாருடன் கூட்டணி வைக்கும் என்ற கேள்வி எழுந்து உள்ளது. திமுக கூட்டணிக்கு அந்த கட்சி செல்லுமா, இல்லை அதிமுக கூட்டணிக்கு செல்லுமா என்ற பயங்கர விவாதம் உருவாகி இருக்கிறது.
இந்த நிலையில் இன்னும் சில நாட்களில் தேமுதிக கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் சந்திப்பு
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின் நீண்ட நேரம் உரையாடினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த சந்திப்பில் அரசியல் கிடையாது. கூட்டணி குறித்து பேசவில்லை. விஜயகாந்தின் உடல்நிலை குறித்து மட்டுமே பேசினேன், என்று குறிப்பிட்டார்.
என்ன விளக்கம்
இந்த நிலையில் தற்போது தேமுதிக பொருளாளர் பிரேமலதா தனது பேட்டியில், தலைவர் விஜயகாந்தை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின் அவரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். அவர் பெற்ற சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார். ஆனால் ஸ்டாலின் உடல்நிலை குறித்து மட்டும் கேட்கவில்லை. எங்களிடம் அரசியல் குறித்தும் பேசினார். அரசியல் குறித்து நீண்ட நேரம் விவாதம் செய்தார், என்று குறிப்பிட்டு இருந்தார்.
பொய்தான்
இதன்முலம் தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் திமுக தலைவர் ஸ்டாலின் கூட்டணி குறித்துதான் பேசினார் என்பது உறுதியாகி இருக்கிறது. ஆனால் ஸ்டாலின் கூறிய பேட்டிக்கு எதிராக பிரேமலதா பேசி இருப்பது, திமுகவிற்கு தேமுதிகவிற்கும் இடையே வார்த்தை போர் ஏற்பட்டு இருக்கிறதா என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது. தேமுதிக அதிமுக பக்கம் செல்கிறதோ என்று கேள்வி எழுந்துள்ளது.
மறைக்கிறார்கள்
கடந்த சில நாட்களாக விஜயகாந்தை சந்தித்த தலைவர்கள் எல்லோரும் அவரின் உடல்நிலை குறித்து விசாரித்ததாகவும், அரசியல் பேசவில்லை என்றும் கூறினார்கள். ஆனால் பிரேமலதா ''நாங்கள் எல்லா கட்சியுடனும் பேசி வருகிறோம்'' என்று கூறியதில் இருந்து இந்த சந்திப்புக்கு பின் அரசியலும் இருக்கிறது. ஆனால் எந்தக்கட்சியும் அதை வெளியே சொல்லாமல் மறைமுகமாக பேசி வருகிறது என்பது புலனாகிறது.