குட்கா உள்ளிட்ட போதை வஸ்துகளுக்கு நிரந்தர தடை விதிக்கப்படும்.. கட் & ரைட்டாக சொன்ன மா.சுப்பிரமணியன்!
சென்னை: எதிர்காலத்தில் குட்கா, பான்பராக் போன்ற போதைப் பொருட்களுக்கு நிரந்தர தடை விதிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் 7ஆம் ஆண்டு இளைஞர் நல விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் மா. சுப்பிரமணியன், அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "ஜப்பானில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சை பற்றி கண்டறிந்து வர அரசு முறைப் பயணமாக எங்களை அனுப்பினார். அதன் விளைவாக, தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் தொடக்க நிலையிலேயே புற்றுநோய் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது." என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனைக்கான தடை தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஒருசில கடைகளில் இன்னும் போதை வஸ்துக்கள் கிடைக்கிறது. எதிர்காலத்தில் குட்கா, பான்பராக் போன்ற போதைப் பொருட்களுக்கு நிரந்தர தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா, மெல்லும் புகையிலைப் பொருட்கள் உள்ளிட்டவற்றிற்கு தடை விதித்து கடந்த 2018ஆம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன் பின்னர் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்குத் தடை விதித்து, உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதித்ததுடன், குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை தடை செய்வதற்கு புதிதாக அரசாணை வெளியிடவும் அனுமதியளித்தது. அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் நிக்கோடின் மற்றும் புகையிலை அடிப்படையிலான குட்கா, பான் மசாலா, மெல்லும் புகையிலைப் பொருட்களை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் ஓராண்டுக்கு தடை விதித்து கடந்த மே மாதம் உணவு பாதுகாப்பு ஆணையர் புதிதாக அரசாணை பிறப்பித்தார்.
போதைப் பொருட்கள் விற்பனைக்கு தடை ஒவ்வொரு ஆண்டும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, வரும் மே மாதத்துடன் இந்த தடை முடிவுக்கு வரும். அப்போதே, உடனடியாக அந்த தடை நீட்டிக்கப்படும். இந்நிலையில் தான் இதனை நிரந்தர தடையாக விதிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்துள்ளார் மா.சுப்பிரமணியன்.












Click it and Unblock the Notifications