தடுப்பூசி கேட்டு மக்கள் போராட வேண்டாம்.. எல்லாருக்கும் தடுப்பூசி கிடைக்கும்.. மா சுப்பிரமணியன் உறுதி
சென்னை: தடுப்பூசி வேண்டும் என மக்கள் யாரும் போராட வேண்டாம் என சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.
தாம்பரம் சானடோரியத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் காசநோய் கிருமியை கட்டுப்படுத்தும் ஆய்வகத்தை அமைச்சர் மா சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில் தாம்பரம் காச நோய் மருத்துவமனையில் தாம்பரம் ரோட்டரி சங்கம் சார்பில் ரூ.90 லட்சம் செலவில் காசநோய் கண்டுபிடிப்பு எக்ஸ்ரே வாகனம் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி மற்றும் ரூ.2 கோடி மதிப்பில் கட்டப்பட்ட காசநோய் ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது.

முயற்சி
தமிழகத்தில் இருந்து காசநோயை அகற்ற அரசு முயற்சி எடுத்து வருகிறது. இந்தியாவில் காசநோயால் பாதிக்கப்படவர்கள் 25 சதவீதம் பேர் உள்ளனர். 2025-ல் காசநோய் இல்லா தமிழ்நாடு உருவாக்கப்பட மருத்துவர்கள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ரோட்டரி மாவட்டம் 3231 மற்றும் ரோட்டரி உலக பங்களிப்பு மற்றும் ரோட்டரி தாம்பரம் மத்திய சங்கத்தின் மூலமாக நடமாடும் எக்ஸ்ரே காசநோய் கண்டுபிடிப்பு வாகனம் ரூ.90 லட்சம் செலவில் அதிநவீன காசநோய் கண்டுபிடிப்பு வசதியுடன் தயாரிக்கப்பட்டு இன்று மக்கள் பயன்பெறும் வகையில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பம்
மிகவும் திறனுள்ள டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய எக்ஸ்ரே கருவி இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு எக்ஸ்ரே படம் எடுத்தவுடன் அந்த படம் வாகனத்தில் உள்ள டிஜிட்டல் திரையில் தோன்றும். அதை அங்கேயே பார்த்து நோயை கண்டறிந்துவிடலாம். மருத்துவர்கள் இல்லாத சூழ்நிலையில் இந்த பிம்பம் மின்னஞ்சல் மூலமாக தொலைதூரத்தில் இருக்கும் மருத்துவர்களுக்கு அனுப்பி அதை ஆய்ந்தறியும் வசதியும் இந்த வாகனத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

88 ஆயிரம்
தமிழகம் முழுவதும் தடுப்பூசி இல்லை. கையிருப்பில் 88 ஆயிரம் தடுப்பூசிகள் மட்டுமே உள்ளது. தடுப்பூசி தொடர்ச்சியாக தமிழகத்திற்கு வேண்டும் என முதல்வர் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். 90 சதவீதம் தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்க வேண்டும். தமிழகத்தில் அனைவரும் தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள தயாராக உள்ளனர். ஆனால் தடுப்பூசி தட்டுப்பாடாக உள்ளது.

2 லட்சம் தடுப்பூசி
மத்திய அரசு கிடங்கில் இருந்து 2 லட்சம் தடுப்பூசிகளை தற்போது வழங்குவதாக மத்திய சுகாதாரதுறை தெரிவித்துள்ளது. தடுப்பூசி வேண்டும் என தமிழக மக்கள் போராட வேண்டாம். அவர்களுக்கான தடுப்பூசி தமிழக அரசு உறுதி செய்யும். தமிழகத்தில் டெல்டா வைரஸ் சோதனை ஆய்வு கூடம் தொடங்கப்படும் என்றார் மா சுப்பிரமணியன்.












Click it and Unblock the Notifications