முதல்வரின் நேரடி கண்காணிப்பில் இருக்கும் திட்டத்திற்கு சிறப்பு அதிகாரி.. யார் இந்த மதுசூதன் ரெட்டி?
சென்னை: முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் இருக்கும் "மக்களுடன் முதல்வர்" திட்டத்தின் திட்ட சிறப்பு அதிகாரியாக மதுசூதன் ரெட்டி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
தமிழக அரசு அவ்வப்போது ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்வது வழக்கம். அந்த வகையில், தற்போது 3 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை சிறப்பு செயலாளராக பி.சங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மக்களுடன் முதல்வர், முதல்வரின் முகவரி திட்ட சிறப்பு அதிகாரியாக மதுசூதன் ரெட்டி ஐஏஎஸ்ஸுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வீட்டுவசதி வாரிய மேலாண் இயக்குநராக எஸ்.பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதில் சமீபத்தில்தான் மக்களுடன் திட்டம் தொடங்கப்பட்டது. பொதுமக்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று சேவை வழங்கும் வகையில் 13 துறைகளை ஒருங்கிணைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார். அரசு அறிவித்துள்ள நலத்திட்டங்கள் மக்களைச் சரியாகச் சென்று அடைகின்றனவா? பல்வேறு துறைகளால் வழங்கப்படுகின்ற சேவைகள் மக்களுக்கு முறையாகக் கிடைக்கின்றனவா? என்பதை தமிழக முதல்வரே களத்திற்கு நேரடியாகச் சென்று, ஆய்வில் ஈடுபட்டு, அரசு இயந்திரத்தை முடுக்கி விட்டு, கள அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தையும் நடத்தி உரிய அறிவுரைகளை வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம்தான் இது.
மக்கள் அரசு நலத்திட்டங்களின் முழுப்பலனையும் அடைவதிலுள்ள இடர்ப்பாடுகளைக் களைய வேண்டியதும் அரசு இயந்திரத்தின் முதன்மையான பணி. அரசு இயந்திரம், கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன், மக்களைத் தேடிச் சென்று பணியாற்ற வேண்டும் என குறிப்பிட்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்த திட்டத்தை விரிவாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் வகையில் இதற்கான சிறப்பு திட்ட அதிகாரியாக மதுசூதன் ரெட்டி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து யார் இந்த மதுசூதன் ரெட்டி என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநரான மதுசூதன் ரெட்டி ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் பொறியியல் பட்டப்படிப்பில் முதுகலை படிப்பை முடித்துள்ளார். கடந்த 2011ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற இவர், வேலூர் மாவட்டத்தில் பயிற்சி கலெக்டராக பணியாற்றியுள்ளார். இதனையடுத்து திண்டுக்கல் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் சப்-கலெக்டராகவும் பணிபுரிந்துள்ளார்.
பின்னர் வருவாய் துறையில் நில நிர்வாக ஆணையாளராக 2 ஆண்டுகளும், சென்னை மாநகராட்சியில் சுகாதாரத்துறை இணை ஆணையாளராகவும் பணியாற்றியுள்ளார். சிவகங்கை மாவட்ட ஆட்சியராக கடந்த 2020ம் ஆண்டு முதல் பொறுப்பு வகித்து வந்திருக்கிறார். பின்னர் நில அளவை நிலவரித் திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு கூடுதல் பொறுப்பாக, மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு அதிகாரி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications