உள்ளாட்சி தேர்தல்: படுகொலை செய்யப்பட்ட மடிப்பாக்கம் செல்வத்தின் மனைவி போட்டி!
சென்னை: படுகொலை செய்யப்பட்ட சென்னை மடிப்பாக்கம் திமுக வட்டச் செயலாளர் செல்வத்தின் மனைவி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகிறார்.
சென்னை மடிப்பாக்கம் 188ஆவது திமுக வட்ட செயலாளராக பதவி வகித்து வந்தவர் செல்வம். இவருடைய அலுவலகம் ராஜாஜி நகரில் உள்ளது. இவர் மாநகராட்சி தேர்தலில் திமுக சார்பில் 188 ஆவது வார்டுக்கு போட்டியிட விருப்ப மனு அளித்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அவரது அலுவலகம் உள்ள ராஜாஜி தெருவில் இருந்து சுமார் 10 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு தெருவில் கட்சியினருடன் பேசி கொண்டிருந்தார்.

கும்பல்
அப்போது இரு சக்கர வாகனங்களில் வந்த கும்பல் மாலையுடன் வந்தனர். தன்னை வாழ்த்த வந்ததாக கருதிய செல்வம் அவர்களிடம் தனியாக சென்ற போது மறைத்து வைத்திருந்த அரிவாளால் செல்வத்தை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர். கொலை செய்தவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

தொழில் போட்டி
இவர் ரியஸ் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். அதனால் தொழில் போட்டி காரணமா இல்லை தேர்தல் முன்விரோதத்தால் இந்த கொலை நிகழ்ந்ததா என்பதை போலீஸார் விசாரித்து வருகிறார்கள். ஆளுங்கட்சியை சேர்ந்த ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மடிப்பாக்கம் செல்வம்
இந்த நிலையில் மடிப்பாக்கம் செல்வம் விருப்பமனு தாக்கல் செய்த அதே 188 ஆவது வார்டில் அவருடைய மனைவி ஷமீனா திமுக சார்பில் போட்டியிடுகிறார். இதுகுறித்து வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்த ஷமீனா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் திமுகவில் எனது கணவர் செல்வம் கடுமையாக பணியாற்றி வந்தார்.

மடிப்பாக்கம் செல்வம் மனைவி
வார்டு கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்டு வெல்ல வேண்டும் என விரும்பினார். ஆனால் அவரை இழந்துவிட்டேன். அவரை இழந்து ஒரு வாரமே ஆன நிலையில் தேர்தலில் போட்டியிடுவது என்பது சற்று கடினமான ஒன்றுதான். இருந்தாலும் எனது கணவரின் விருப்பத்தை நிறைவேற்ற கட்டாயம் இந்த தேர்தலில் வெற்றி பெறுவேன் என்றார்.












Click it and Unblock the Notifications